அலைஞனின் அலைகள்: புலம்

Friday, December 31, 2004

உணர்ந்ததை உரைக்கிறேன்

கடந்த ஒரு கிழமையாக எனக்கு நேரே இளைய தம்பி திருகோணமலை சமூக-பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு (SEDOT) ஊடாகவும் மருத்துவராகவும் பெற்ற அனுபவத்தினைச் சொல்ல, அதிலே நான் கிரகித்துக்கொண்டது கீழுள்ளவற்றிலே அடங்கும். ஏற்கனவே செய்தியூடகங்களிலும் மற்றைய நண்பர்கள் அறிந்து எழுதியவற்றினையும் நான் அறிந்த அளவிலே சொன்னது சொல்லல் வேண்டாததாலே தவிர்த்திருக்கின்றேன். இக்கருத்துகள் நான் புரிந்து கொண்டவை சரியானால், என் தம்பியின் தனிப்பட்ட அவதானிப்புகளின் விளைவானவையேயொழிய SEDOT இன் கருத்துகளையோ அவன் தொழில்புரியும் திருகோணமலை ஆதாரவைத்தியசாலையின் கருத்துகளையோ பிரதிபலிப்பனவல்ல. அதனாலே, தகவலைச் சொல்லும் விதத்திலே கொஞ்சம் தனிப்பட்டதான தொனிகூட இருக்கக்கூடும்.

திருகோணமலை-மூதூர் பிரதேசத்தினைக் கடல் தாக்கிய நேரத்திலே, இவன் திருகோணமலை மூதூர் கடற்பாதையிலே ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்னாலே வெள்ளத்தினாலே பாதிக்கப்பட்ட மூதூர்-ஈச்சிலம்பத்தைக்கிராம நிவாரணவேலையின் அடுத்த கட்டமாக இயந்திரப்போக்குவரத்துப்படகிலே வேறு பயணிகளோடு போயிருந்திருக்கின்றான். படகிலேயிருந்தவர்கள் இலங்கைக்கடற்படையினராலே காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள் (இ·து என் அம்மாவின் தகவல்).

நிலாவெளி-சலப்பையாறு இடைப்பட்ட பிரதேசத்திலே, SEDOT இனாலே இலங்கையிலே தமது சொந்தப்பிரதேசங்களுக்கு மீண்ட அகதிகளுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு வீடமைப்புத்திட்டம் இருப்பதாலே, இவ்வூழியலை நிகழ்ந்த மறுநாள் சென்ற திங்கட்கிழமை சென்று முடிவுவரை செல்லமுடியாமற் திரும்பியிருக்கின்றார்கள். இடையிலே பாலங்கள் உடைந்திருப்பதினாலே மேலே செல்லமுடியவில்லையாம். இப்பாதையிலேயிருக்கும் ஓரிரு சிறிய கடற்படைமுகாங்கள் அழிவுற்றிருப்பதாலே, அங்கிருக்கும் போராயுதங்களிலே (கடற்படையினராலே?) மீட்டெடுக்கப்பட்டவை தவிர்ந்த சிறிய எறிகுண்டுகள் போன்றவை சேதமுற்ற வீடுகளுள்ளே பரந்திருப்பதாலே அவற்றினைக் கண்டு அகற்றும் தேவையுமிருப்பதாகச் சொன்னான். இவர்கள் வரும்வழியிலே நிலாவெளி உல்லாசப்பிரயாணவிடுதியிலே தடுமாறி நின்ற ஐந்து வெளிநாட்டவர்களைக் கொண்டு வந்து நகரிலே இறக்கிவிட்டதாக அடுத்த தம்பி கூறினான்.

வாகரை மட்டக்கிளப்பு மாவட்டத்திலேயிருந்தாலுங்கூட, மீதி மட்டக்கிளப்பு மாவட்டத்திலேயிருந்து முழுக்கவே தனித்துப்போயிருந்ததாலும், செவ்வாய்வரையும் ஏறக்குறைய முற்றாகவே ஏதும் உதவி அங்குச் சென்றடையாததாலும் மூதூர்த்தேர்தற்தொகுதியிலே வெருகலுக்கப்பாலேயிருக்கும் இப்பிரதேசத்துக்குப் போய்வருவதாகத் தீர்மானமானதாம். கருணாவின் முன்னைய தளப்பிரதேசமான வாகரை மற்றைய காலத்திலேயே மிகவும் அடிப்படைவசதிகளற்ற, போர்க்கால இறப்புகள் அதிகமாகவிருந்த பிரதேசம். (சக்தி வானொலியிலே ஒரு செய்தியாளர் மக்கள் வீதியிலே தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிப்பதாகச் சொல்லிக் கேட்டிருந்தேன்) புதன் கிழமை அங்கு சென்று ஐந்து மக்கள் தங்கு முகாங்களை - ஊரியங்காடு, கண்டலடி, கதிரவெளி, புளியங்கண்டல், கட்டுமுறிப்பு- அமைக்கின்றதற்கு உதவிகளைச் செய்ததாகக் கூறினான். அங்கிருக்கும் மக்களுக்கு சேதம் விளைந்தவுடன் முதலிலே உதவி புரியச்சென்றவர்களும் உணவு வழங்கியவர்களும் கடலண்டாத உட்பிரதேசமான சேருவில என்ற குடியேற்றப்பிரதேசத்திலேயிருக்கும் சிங்களமக்களே என்பது குறிப்பிட்டுச்சொல்லப்படவேண்டியதென்றான். அம்மக்களுக்கு (அந்நேரத்திலே) மருத்துவ உதவி செய்வற்காக 15 யாழ் மருத்துவமாணவர்கள் வந்திருப்பதாகச் சொன்னான். பொதுவாக, ஸ்ரீலங்காவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் மருத்துவர்கள் நிறையவே செய்ய விரும்பியபோதுங்கூட, அவர்கள் ஒரேயிடத்திலேயே தங்கியிருந்து சேவையாற்ற முடியாதிருக்கும் அமைநிலைமையிலே அவர்கள் வேறுவேறு இடங்களுக்குச் சென்றுவிடுகின்றார்கள்.

மேலும், ஜேவிபி வைத்தியர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் சில சிங்கள வைத்தியர்கள் அரசியல் செய்வதிலும் முரண்டுபிடித்து இனவாதம் கிளப்புவதிலுமே ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது. நேற்றைக்கு, வெள்ளிக்கிழமை பேசியபோது அறிந்ததுகொண்டதென்னவென்றால், திருகோணமலை ஆதாரவைத்தியசாலையிலே கீழ்மட்ட ஊழியர்கள் குறைவாகவே இருப்பதாலேயும் இதுபோன்ற பல இற்றைநிலை அற்பக்காரணங்களை முன்வைத்தும், சில சிங்கள அரசியல்வாதிகள், மாவட்டத்திலே பெரிதான திருகோணமலை வைத்தியசாலையை அதன் ஆதாரவைத்தியசாலை தரத்திலிருந்து நீக்கி, சிங்களப்பெரும்பான்மை வாழும் கந்தளாயிலே உள்ள வைத்தியசாலையை ஆதாரவைத்தியசாலை ஆக்கிவிட முழுமுயற்சி எடுப்பதாகத் தெரிகின்றது. திருகோணமலைக்கு வரும் உதவிகளே இப்படியான அரசியல்வாதிகளாலும் அவர்களோடு இயங்கும் சில பெரும்பான்மையினத்தினராலும் வழங்கப்படமுடியாமல், (சில நேரங்களிலே பாதிக்கப்படாத உள்நாட்டிலே வாழும் சிங்களமக்களுக்குச் சும்மா வழங்கப்பட்டிருப்பதாக, இன்றும் நேற்றிரவும் செய்திகளிலே நான் படித்தும் கேட்டுமிருக்கின்றேன்) இருக்கின்றதாம். தவிர, அண்மையிலே திருகோணமலையிலே நிகழ்ந்த எல்லா இனத்தவருக்கும் எல்லா உதவிசெய்யமைப்புகளுக்குமான கூட்டத்தின்பின்னே, திருகோணமலை அரசாங்க அதிபர் உரொட்ரிக்கோவே நிவாரணநிதி/உதவியினைப் பிரித்துவழங்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாலே, நடைமுறைச்சிக்கல் ஏற்பட்டிருப்பதாக, எனக்கு நேற்று திருகோணமலைக் கச்சேரியிலே நிகழ்ந்த அடாவடித்தனமான நிகழ்வு உணர்த்துகின்றது.

அகதிகளுக்கு மிகவும்தேவையான அத்தியாவசியப்பொருட்களாக, கட்டிடப்பொருட்கள், மின்பிறப்பாக்கி, சமையற்பாத்திரங்கள் இருக்கின்றதாம் - அதுவும் அடர்ந்த மழை பெய்யும் இந்த நிலையிலே மிகவும் நெருக்கமாக இருக்கும் அகதிமுகாங்களிலே (திருகோணமலை கஞ்சிமடம் பாடசாலை (அநுராதபுரம் சந்தி கலைமகள் வித்தியாலயம்), மூதுர் இலங்கைத்துறை, நிலாவெளி வேலூர் என்பன சிலதாம்) நோய் பரவும் சாத்தியங்கள் அதிகமாகவிருக்ககூடும் என்றதும் தற்காலிகமாக உதவி செய்யச் செல்லமுடியாதிருக்கும் நிலையும் உண்டாகியிருக்கின்றது. வியாழன்/வெள்ளி மூதூர்-ஈச்சிலம்பத்தை, வாகரை ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லவிருந்தபோதுங்கூட, போக்குவரத்திலே நடைமுறைச்சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னான். இங்கே குறிப்பிடவேண்டிய இன்னொரு விடயமென்னவென்றால், பல பாதைகள் சுத்தம் செய்யப்படாத நிலையிலும் இன்னமும் பிணங்கள் அகற்றப்படாதநிலையிலேயே இருப்பதாலும், அப்படினான பிரதேசங்களிலே நிலைமை இன்னும் மோசமடையக்கூடலாமென்று தெரிகின்றது.

இவை எல்லாவற்றினையும் விட மோசமான - ஆனால், இதுவரை பெருமளவிலே உணர்ந்து தொழில்சாரளவிலே செயற்படாத - நிலைமை, உடல்ரீதியான விளைவுகளுக்கு நிவாரணங்கள் கிடைக்கின்றபோதும், மக்கள் உளரீதியாக அடைந்திருக்கும் தாக்கத்திலேயிருந்து மீட்டுவர உளவியல் நிபுணர்களோ பயிற்றப்பட்டவர்களோ அதிகமில்லாது இருப்பதெனத் தோன்றுகின்றது. உறவு உடைமைகளை இழந்தவர்களின் உளநிலை, தற்போது நிவாரணத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் ஓரளவுக்குச் சிக்கலை உருவாக்கியுள்ளது. பித்துப்பிடித்து மெய்யாகவே அதிர்ச்சியினைத் தாங்காமல் இந்நிகழ்வினை ஒரு கனவுநிலைபோல எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலே இருக்கின்றார்கள் என்று தெரிக்கின்றது. தவிர, வாகரை மக்களிலே கணிசமானோரின் தொழில் மீன்பிடித்தல்; ஆனால், இந்த அநர்த்தத்தின்பின்னாலே, தான் பேசிய சிலர் இனி கடற்பக்கமே போகமாட்டோமென்ற உளவியல்வெறுப்போடும் பயத்தோடும் இருப்பதாகத் தெரிகின்றார்கள் என்றான். ஆனால், அதுவே வாழ்தொழில் அதுவானபோது -அதைவிட வேறு தொழிலனுபவம் இல்லாதபோது -, அதைவிடுத்து என்ன செய்யமுடியுமென்று தோன்றவில்லை. இந்நிலையிலே உளவியல் நிபுணர்கள் அவசியமாகின்றது. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலே, SEDOT இலே இரண்டு உளவியல் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டிருப்பதாகவும் கொழும்பிலே உளவியல் மருத்துவநிபுணனானத் தொழில்புரியும் எங்கள் நண்பன் தற்போது தொழில்புரியும் வைத்தியசாலையிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக்கொண்டு திருகோணமலை வர இசைந்திருப்பதாகவும் அதற்கான விடுப்பு அனுமதியை சுகாதார அரசு தந்திருப்பதாகவும் சொன்னான் (இன்றைக்கு வருகின்றதாக, இப்போது தொலைபேசியபோது அறிந்தேன்). இதன்மூலம் இன்னும் சில உளவியல் ஆலோசனைகூறுகின்றவர்களைப் பயிற்றுவிக்க உடனடித்திட்டமிருப்பதாகவும் தெரிகின்றது.

அடுத்த சங்கடம், கிடைத்திருக்கும் உதவிகளை, பொருட்களைப் பங்கிடுதல் குறித்த நடைமுறைச்சிக்கல்; அரசாங்க அதிபரூடாகச் செல்லவேண்டுமென்று இன்றைய நிலை ஒரு புறமிருக்க, கொடுக்குமிடங்களிலும் ஓரூரின் ஒரு பகுதிக்குக் கிடைக்க, மறுபகுதிக்கான அமைப்பு கொடுக்கும்வரை, கிடைக்கும்பகுதியையும் கிடைக்கவிடாது தடுப்பதுபோன்ற சில புரிந்துகொள்ளக்கூடிய, ஆனால், தவிர்க்கவேண்டிய நிலைமைகள் இருக்கின்றன. கூடவே, கொண்டு செல்வதற்கான வாகனங்கள்- குறிப்பாக, மழை, வெள்ளம், விளைவான சேற்றுநிலம் என்பவற்றிடையேயும் தொழிற்படக்கூடிய, உழவு இயந்திரம், ஜீப் போன்ற கனரகவாகனங்கள் தேவையாக இருக்கின்றதாம். அவை இல்லாமல், சில சந்தர்ப்பங்களிலே கிடைத்திருக்கும் உதவிகளையும் வேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய நிலைமை இல்லாதிருக்கின்றது.

இந்தக்கிழமை அல்லது வரும் கிழமை திருகோணமலையிலே இருந்து ஓர் இணையத்தளம் நிவாரணம், நிலைமை குறித்து தாங்கள் அமைத்து ஏற்ற இருப்பதாகவும் கூறினான். கூடவே பாதிக்கப்பட்ட களங்களுக்குச் செல்லும் மயூரனும் திருகோணமலை மாவட்டம் குறித்த மேலதிக செய்திகளைத் திரும்ப வந்து தன் வலைப்பதிவிலே தருவார் என்று நம்புகிறேன்.

ஆனால், இன்னொன்றினையும் இந்நிலையிலே அவதானமாகவும் ஆறுதலாகவும் யோசிக்கவேண்டியதாக இருக்கின்றது. உடனடியாக உணர்வுமயப்பட்ட நிலையிலே உதவி குவிகின்றது; ஆனால், உணர்ச்சிகளும் வெள்ளமும் வடிந்தபின்னாலே, தொழில்புரி வசதி, வாழிடம், உறவு எல்லாவற்றினையும் இழந்து நிற்கின்ற பேரெண்ணிக்கையான மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையினைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்காக என்ன திட்டங்களையும் அதற்கான பொருளாதார, உளவியல், மருத்துவவசதிகளையும் பலத்தினையும் நாங்கள் வழங்கப்போகின்றோம் என்பது நிதானமாக யோசிக்கப்படவேண்டும். அதனால், நிதியினையும் உதவிகளையும் உளம் கனிந்தும் நெகிழ்ந்தும் வழங்குகின்றவர்கள், எதிர்காலத்திலும் - குறைந்து ஓரீர் ஆண்டுகளுக்கேனும் - தாயகத்து உறவுகளுக்குக் கைகொடுக்கும்வண்ணம் தமது நிதி, உதவிகளைத் திட்டமிட்டு வழங்கவேண்டுமென்பது என் அபிப்பிராயம். ஏன் உங்கள் புத்தாண்டுத்தீர்மானங்களிலே இப்படியான உதவி செய்தல் குறித்ததும் ஒன்றாக இருக்கக்கூடாது?

Wednesday, December 29, 2004

எழுத்துக்கத்தையுட் பதுங்கும் கழுதைப்புலி

சற்று நேரம் முன்னாலே கண்ட ஒரு பதிவு மிக வெறுப்பினையும் ஆத்திரத்தினையும் ஏற்படுத்தியது. அதற்குச் சரியான விதத்திலே பதில் கொடுப்பது மிகச்சுலபம். ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வலைப்பதிவின் பின்னூட்டப்பெட்டியிலே நிகழ்ந்த வலைச்சண்டையின் பின்னாலே, சில விடயங்கள் தொடர்பாக எதையுமே இனிமேல் பேசுவதில்லை என்றும் மிதமிஞ்சிய உயர்வுமனப்பிறழ்வினாலே பாதிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட சில கறுப்பு-வெள்ளைமட்டுமே காண் கண்களுள்ள மேலாதிக்கவாதிகள் சிலருடன் எதையுமே எப்போதுமே பேசுவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

இங்கே நான் சொல்லும் பதிவினைத் தந்திருக்கின்றவர், கிட்டத்தட்ட ஜெயமோகனின் எழுத்தை வாசிக்கின்றோமென்ற உணர்வினை ஏற்படுத்தும் ஒரு மேலாதிக்கவாதி; ஜெயமோகனின் வாசிப்புவிரிவு குறித்தல்ல நான் சொல்வது; வழவழா கொழகொழாவென்று சுற்றிவளைத்து புளியம்பழம் உலுப்பிக்கொட்டியதான எழுத்துவிரிவினையும் உயர்ந்த பீடத்திலே குந்திக்கொண்டிருந்து மற்றவர்களைக் கீழே குந்திக்கொண்டு குரு மூஞ்சியை தூக்கி எறியும் உரொட்டித்துண்டுக்கு அண்ணாந்து பார்க்கும் தெருநாய்களுக்குப் பேசுவதாக எண்ணிக்கொள்ளும் தன்மையையும் வாரத்துக்கொருமுறை (நித்யசைதன்யநிதிபோல) தன் குருவினைத் தூக்கிகொண்டாடும் 'சுயாதீனச்சிந்தனையும்' குறிப்பிட்ட சில நிலைப்பாடுகள், கொள்கைகள், கருத்துகள், அவற்றினைக் கொண்டவர்கள் மீதான காழ்ப்புத்தன்மையினையும் ["எப்போதோ மறைந்துபோன மெய்யியல்வாதியான தளையசிங்கத்தை (மதுசூதனன் 'வல்லினம்' இதழிலே சொல்வதுபோல)அரைகுறையாகக் கிண்டியெடுத்து தலைதாங்கி ஜெயமோகன் கொண்டாடுவது, கைலாசபதி போன்ற இடதுசாரி விமர்சகர்களை மடக்கி/மட்டம் தட்ட அல்லவாம்"] கொண்ட பண்புக்குதம்பலைக் சொல்கிறேன். ஆனால், இந்த அதீத உயர்வுப்பிறழ்வாளுமையாலே பாதிக்கப்பட்டிருக்கும் மேலாதிக்கவாதியின்இணையக் குருபீட எழுத்துகளையும் தொடர்ந்து வாசிக்கின்றவர்களுக்கு - அப்பதிஞர் செய்யும் நல்ல காரியத்தின் மேலாகவும்- அவரின் இன்றைய பதிவின் மோனக்கள்ள உள்ளர்த்தமும் குருபீடப்பிரசங்கமும் மூடி திறந்து அடிகிடக்கும் முகம் காட்டியிருக்கும் என்பது என் நம்பிக்கையும் அவாவும். ஒருவரது சாதி/பிரதேச/மொழி நிலைப்பாடு பாஸிஸம் அல்லது குறுகல்நிலைவாதமென்றால், இன்னொருவரது தன் தேசம் என்ற பெருமை மட்டும் ஏன் பாஸிஸமாகாது அல்லது ஏன் விரியுளநிலையாகாது என்று இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி தோன்றுகின்றது. தன்னிலை மட்டுமே சரியான நிலை மற்றவரது இல்லை என்று தனது உளைச்சலைமட்டும் முன்வைத்து ஒருவர் எழுதினால், அவரது நோய்க்கு ஏது மருந்து?! ("Patriotism is the last resort of a Rogue" என்று யாராவது பழம்பெரும் அமெரிக்கச்சுதந்திரவீரரை மேற்கோள்காட்டி நானும் போகிறபோக்கிலே சொல்லிவிட்டுப்போகிறேன்.)

எனக்குப் பீய்ச்சாக் கழிவைப் பீய்ச்சிப் பதிவதிலும்விட, இன்றைக்கு இந்தக் குருபீடப்பதிவை வாசிக்கமுன்னாலே சொல்ல வந்ததை நான் பதிவது மேலானதாகப் படுகின்றது. இன்றைய நாளும் உளமும் இருக்கும் நிலையிலே நான் வேண்டவே வேண்டாததெல்லாம், வலைவாள்வீச்சும் வீணான பேச்சைப் பேசிக்கழிப்பதும்.

Tuesday, December 28, 2004

எதேச்சையாய் எண்ணங்களும் அலையும்

ஊழியலை திருகோணமலையைத் தாக்கியது தமிழ்நெற்றில் அறிந்தது தொட்டு, குடும்பத்தினரின் நிலை அறியும்வரையுமான உள, களநிலையை விரித்தால், ஒரு புதினம் தேறும்; அதனாலே, அதைப் புதினமாகவே எழுத வைத்துக்கொள்கிறேன்.

இந்தப்பேரலை-அழிவின் பின்னாலே படும் செய்திகளின் அடிப்படையிலே இப்போதைக்குச் சில எண்ணங்கள்

1. இந்த அநர்த்தத்தினை முழுவதுமாகத் தவிர்த்திருக்கக்கூடுமென்று எனக்குத் தோன்றவில்லை; இந்தப்பூமிக்கீழ் நிலநடுக்கம் காரணமாக, இந்து மாகடல் இதுவரை பாதிக்கப்பட்டதில்லை; பொதுவாக, இந்நிலை பசிபிக் மாகடலுக்கான - அதன் கீழான பூமியமை பிறழ்வுகளின் உராய்வுகளின் விளைவான- அவநிலை. அதனாலே, இந்துமாகடலிலைச் சுற்றி வரலாற்றுத்தரவுகளினடிப்படையிலே இந்த அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதொன்றல்ல; அந்நிலையிலே நாளாந்த வாழ்நிலைக்கே அல்லாடும் மக்களைக் கொண்ட அபிவிருத்தி அடைந்துவரும் இந்துமாகடல்நாடுகள் இது குறித்த முன்னெச்சரிக்கைத்திட்டங்களை வைத்திருந்திருக்கவேண்டுமென்று குற்றம் சாட்டுவது பொருத்தமாக இருக்காது. ஆனால், குறைந்தபட்சம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலே ஓரளவுக்கேனும் இறந்தார் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம். மணிக்கு 870 மைல் என்ற கதியிலே ஊழியலைகள் பயணம் செய்ய வல்லன என்பதைக் கருத்திலே கொண்டு பார்த்தாற்கூட, இலங்கை + இந்தியா போன்ற நாடுகளை சுமத்திரா எல்லையிலிருந்து வந்தடைய ஏறக்குறைய இரு மணிநேரங்கள் ஆகியிருக்கும். இந்நிலையிலே ஒரு மணிநேரத்தின் பின்னாகவேனும் அறிய வசதியிருந்திருக்க வேண்டும் (இத்தனை செயற்கைக்கோள்கள், நிலநடுக்கத்தரவெடு நிலையங்கள் உலகம் சூழ இருக்கின்ற நிலையிலே); அப்படியான கூட்டுதவிகள் செய்யப்பட்டிருப்பின், உயிரழிவு பேரளவிலே குறைக்கப்பட்டிருக்கலாம். குறைந்தபட்சம், எதிர்காலத்திலேனும் இப்படியான பேரழிவுகளை ஓரளவுக்கு எதிர்வுகூறும் அறிவியல் வசதிகளை இந்துமாகடல்நாடுகள் அமைத்துக்கொள்ளவேண்டும்.

2. இன ரீதியான அரசியலும் இப்போதைய இழவுநிலைக்கான நிவாரணமும்; 'வடக்கு-கிழக்கு தாழ்கிறது; தெற்கு-மேற்கு வாழ்கிறது' என்ற குரல் எழுந்திருக்கின்றது; வடகிழக்கின் பெரும்பகுதி புலிகளின் கையிலே இருந்தபோதும், புவியியல்சார் அமைவிலே வடகிழக்கிலேயே பாதிப்பின் அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தபோதுங்கூட, நிவாரணம் இலங்கை அரசின் கைகளினூடாகச் செல்லும்போது எதற்கு, எங்குப் போகப்போகின்றதென்பதிலே பெரும் கேள்வி எழாமலில்லை; ஏற்கனவே, திருகோணமலைக்குச் சென்ற நிவாரண உதவி ஹபரண இலே வைத்து சில சிங்களசமூகத்தினராலே காலியிற்குக் கொண்டுபோகப்படவேண்டுமென்று அடாவடித்தனத்துடன் இடைமறிக்கப்பட்டிருக்கின்றது; வைத்திய உதவியோ வடக்கு-கிழக்கு. எதிர்.தெற்கு-மேற்கு என்று பார்க்கும்போது, குழியும் மலையும் போல வேறுபட்டிருக்கின்றது; இதற்கு அரசியல்ரீதியான நிலையும் போக்குவரத்து வசதியும் ஓரளவுக்குக் காரணமென்பதினை மறுப்பதற்கில்லை. ஆனால், முன்னைய அனுபவங்கள் எச்சரிக்கையோடு இருக்கச் சொல்கின்றன. இந்நிலையிலே இரண்டு விதங்களிலே இலங்கையின் வடக்கு-கிழக்கு சார்ந்தவர்கள் தொழிற்படவேண்டும் - குறிப்பாக, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மக்கள்; ஒன்று, தாம் நிவாரணநிதி வழங்கும் நாடுகளிலே வாழ்ந்தால், அந்த அரசுகளை இந்நிதிகளை இலங்கை அரசு சார்பற்ற, உலக நிறுவனங்களூடாகக் கொடுக்கும் வகை செய்கின்றதா என்று காண வேண்டும்;, அப்படி இல்லாத பட்சத்திலே அவ்வாறு இருக்க நிர்ப்பந்திக்க வேண்டும் (நேற்று, கனடாவின் CTR வானொலி, அந்த வகையிலே தொராண்டோவின் ஓர் அரசியல்வாதியினை தமது வானொலிக்கு அழைத்து, கனடிய அரசு அவ்வாறு செய்கின்றதென்பதை உறுதிப்படுத்திக்கொண்டது); குறைந்தது, நிதிவழங்கும் அரசின் பிரதிநிதிகள், இந்த நிதி பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இனம், மொழி, மதம் சாராது சென்றடைகின்றதென்பதை உறுதிப்படுத்தும்வண்ணம் அனுப்பவேனும் நிர்ப்பந்திக்கவேண்டும்; அரசுகளைச் சாராது நிதி வழங்கும் வெளிநாட்டுத்தமிழர்கள், அரசு/அரசியல்சாரா தமிழ் நிறுவனங்களூடாக அனுப்ப முயலவேண்டும். பல பெரு, சிறு அமைப்புகள் இருக்கின்றன; ஆனால், ஒவ்வோர் அமைப்புக்கும் கொடுக்கப்படுவது, செல்லவேண்டிய இடத்தினை, வேண்டிய காலத்திலே சென்றடைகின்றதா என்பதினை வழங்குவோர் அறிய வழிவகையும் செய்யப்படவேண்டும். இது மிகவும் அவசியம். தவிர, வடக்கு-கிழக்கிலே தமிழர்சார் நிறுவனங்கள் உதவிசெய்யும்போது, பாதிக்கப்பட்டார்களின் தேவைகளையும் அவர்களுக்கு எந்தளவு அத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் நோக்கி, அவசியத்தின் வரிசைக்கிரமத்திலே உதவி செய்யவேண்டுமேயழிய, இனம்-மதம்-மொழி-பிரதேசம்-சாதி அடிப்படையிலே செயற்படக்கூடாது; இதனை வடக்கு-கிழக்கிலே பெரும்பகுதியினைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருக்கும் விடுதலைப்புலிகள் ஓரளவுக்குக் கண்காணிக்கவேண்டும். அரசியல்ரீதியிலேகூட, இவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கும் முஸ்லீம்கள், சிங்களவர்கள் ஆகியோரிடம் தங்களின் நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கும் நட்பேற்படுத்திக்கொண்டு விரிசல்களை ஒட்டமுயலவும் இது நல்லதொரு தருணம்.

3. இன்றைய நெகிழ்வுநிலையும் இலங்கைப்பிரச்சனையின் இராணுவரீதியான சமநிலைப்பிறழ்வும்; இவ்வூழியலை அநர்த்தத்தின்விளைவாக, பருத்தித்துறையிலிருந்த முனை இராணுவமுகாம் போன்ற பெரிய இராணுவமுகாங்களிலிருந்து, நிலாவெளி இராணுவமுகாம், மட்டக்கிளப்பிலே சில சிறிய இராணுவமுகாங்கள் ஆகியன முழுக்க அழிந்துள்ளன என்பதாகச் செய்தி; கூடவே திருகோணமலை கடற்படைத்தளமும் சேதமடைந்திருக்கின்றது; 58 அளவிலே இராணுவ அதிகாரிகள் இறந்திருப்பதாக, ஸ்ரீலங்கா அரசின் தகவல். புலிகளின் தரப்பின் அறிக்கையின்படி, ஆகப் பதினைந்து கடற்புலிகள் இறந்தும் சில படகுகள் அழிந்துமிருக்கின்றன. ஆனால், இலங்கை அரசின் ரூபவாஹினி கடற்புலிகளின் தளபதி சூசை கூறியதாகச் சொல்லி, பெருந்தொகையான புலிகளும் புலிகளின் கிழக்கு வடமராட்சி, முல்லைத்தீவு பகுதிகளிலே அமைந்திருக்கும் சில முகாங்களும் தளங்களும் முற்றாக அழிந்திருப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இதைப் புலிகள் மறுத்திருக்கின்றனர். உண்மை பொய் எதுவோ, சூசைக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைக்குமிடையே கருத்து பேதம் என்றதொரு அபிப்பிராயத்தை உருவாக்க, ஸ்ரீலங்க அரசும் இராணுவமும் கடந்த மூன்று மாதங்களாகவே முயன்று வருகின்றன. அடுத்ததாக, ஸ்ரீலங்கா அரசு கேட்டிருக்கும் நிதியுதவியும் பொருளுதவியும் பொருளாதாரத்திலும் இராணுவநிலையும் நலிந்திருக்கும் ஸ்ரீலங்கா அரசின் நிலையை மேம்படுத்தத் திசை மாற்றி எடுக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்; சில நாடுகள் இப்படியான நிலையை இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவ எதிர்பார்த்திருப்பதும் தெளிவு. இதன் காரணமாகவே, அரசுக்குப் போகும் செலவுக்குக் கணக்கு வெளிப்படையாக இருக்கவேண்டும். இன்னொரு நடைமுறைப்பெரும்பிரச்சனை, வெள்ளம் காரணமாக புலிகள், இராணுவம் இரண்டு தரப்பினரும் புதைத்திருக்கும் கண்ணிவெடிகளின் இடநகர்வு; இந்நிலை புதைத்தவர் வெடிகுறிநிலப்படங்களும் எதற்கும் பிரயோசனமில்லை என்றாக்கியிருக்கின்றது; மக்களே பாதிப்புக்குள்ளாகப் போகின்றார்கள் என்ற அநியாயம்.

4. பண்பலை வானொலிகள் தமிழைக் கெடுக்கின்றதென்று கத்திக்கொண்டிருந்தவர்களிலே நானும் அடக்கம் (பண்பாட்டினைக் கெடுக்கின்றதென்று எனக்கு எப்போதும் கவலையிருந்தவில்லை). ஆனால், கனடாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, கொழும்பிலும் சரி; இந்த வானொலிகள் தங்கள் முகத்தினைப் பிரகாசப்படுத்திக்கொண்டு நற்பெயர் பெற உழைத்தன என்று கொண்டாலுங்கூட, அவற்றின் சேவை கடந்த இருநாட்களிலே மிகவும் பயனாக இருந்திருக்கின்றன. இவ்வகை வானொலிகள் இன்றி இப்படியான நிகழ்வுகள் சாத்தியமில்லை என்று கூறும்வண்ணம், நிதியுதவி சேர்க்கவும் காணாமற்போனோர் பற்றிய விபரங்களைப் பரிமாறி தொடர்புகளை ஏற்படுத்திக்கொளவும் உதவியிருக்கின்றன. அந்த வகையிலே மனிதனுக்குப் புரியச்சொல்லும் மொழி கிடக்கட்டும், மனிதனை வாழவைக்கும் செயற்பாட்டின் விளைவினைச் சுட்டிப் பாராட்டியே ஆகவேண்டும். இணையமும் இதுபோல ஓரளவுக்கு உதவுகின்றது.

5. இனியும் தொடராக, ஆனால், சிறிய அளவிலே நடுக்கத்தின் பின்விளைவு எதிரொலிக்கும்; ஆனால், அ·து பெருமளவிலே உயிர்கொல்லுமளவிலே இருக்கப்போவதில்லை. இனி அப்படியேதும் உயிர்கொல்லும் நிலையின் நிலநடுக்கமும் ஊழியலையும் வருமானால், அது கொல்லவேண்டியவர்கள் யார்யார் என்ற பட்டியலிலே அடங்கும் சிலர்:- "கொட்டாஞ்சேனை ஆஞ்சநேயர் இது நடக்கமுதல்நாள் ஒற்றைக்கண் திறந்து பார்த்தார்" என்கிறவர்கள்; "ஸ்ரீரங்கம் கோபுரம் உயர்ந்து போனதாலே" என்கின்றவர்கள்; "அல்லாவின் அல்வாக்கூத்து, அல்லேலுயாவின் பராட்டாகொத்து" என்கிற படுபாவிகள்; "ஜெயேந்திரரைப் புடிச்சதால தெய்வக்குத்தம்; வீரப்பனைச் சுட்டதால வீரமாகாளி ஆவேசம்" என்று விபரீதமாக விக்கெட்டு வீழ்த்துகின்றவர்கள்; "எண் சாத்திரப்படி வந்த இழவு" என்று எதிர்காலத்துக்கும் இழவுக்குறி எடுத்துச் சொல்கின்றவர்கள் & செல்கின்றவர்கள்; "நொஸ்ரடாம், காண்டம்" என்ற உசாத்துணை அகவுகின்ற கிளிகள்; "திருவாதிரை நட்சத்திரத்திலே வைகை பெருகி பிட்டுக்கு மண்சுமந்த நாளிலே, இந்தக்கடல்....." என்று அறிவியல் சாராமல் முழுக்க முழுக்க காகம் குந்தியதும்-பனம்பழம் கழண்டதும் கதை சொல்கிற ஆசாமிகள். ஆதிரைநாளிலே தீர்த்தமாடிய காரைநகர்ச்சிவன்கோவிற்காரர்களுக்கும் மோட்சவிளக்கு; முல்லைத்தீவிலே தேவாலயத்திலே யேசு பிறந்ததைக் கொண்டாடியவர்களுக்கும் இறப்பு; நிந்தாவூரிலோ, காத்தான்குடியிலோ மதராஸிவிலே குரான் ஓதிக்கொண்டிருந்த நாற்பது சிறாருக்கும் அதே(¡)கதி; கடவுளையும் எண்கணக்கையும் இழுத்து உள்ளாற அமைதிப்படுத்திக்கொள்ளாலாம்; ஆனால், அதுவே தீர்வாகாது; கொடுத்தவன் எடுத்தான் என்பது அரூபத்தீர்வாகலாம்; நடைமுறைக்கு அடுத்த நிலைக்கு என்ன வழி என்பதைக் காணவேண்டும்.

6. ஒரு சின்ன நிம்மதி; இனி, பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஸ்ரீலங்கா என்றால் எங்கே இருக்கின்றது என்பது குறித்தோ அல்லது இரண்டு மணிநேர இட, கால, அரசியல் விளக்கத்தின்பின்னும், "So, basically, which part of India?" என்ற மண்ணாங்கட்டிக்கேள்விகள் குறித்தோ பதில்கூறும் தொந்தரவு குறையுமென்று ஒரு நம்பிக்கை.

Monday, December 13, 2004

பினோஸேயின் வீட்டுக்காவலின் பின்னாக...


பினோஸே-அலன் டே

சோம்பலுக்குரிய இந்தத்திங்கட்கிழமை ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியோடு விடிந்திருக்கின்றது. சிலியின் பினோஸே (Pinochet) அவருடைய ஆட்சிக்காலத்தின் அடக்குமுறையின் சில நிகழ்வுகளுக்குப் பொறுப்பாகக் காட்டப்பட்டு, வீட்டுக்காவலிலே வைக்கப்பட்டிருக்கின்றார். இற்றைக்காலகட்டத்திலே செய்திகளிலே பெரிதும் பேசப்படாத முதலாவது செப். 11 இனை நடத்தியவர். பாக்கிஸ்தானின் பூட்டோ மூன்றாம் மட்டத்திலேயிருந்த ஸியா வுல் ஹக்கினை தலைமை இராணுவ அதிகாரியாக்கி விளைவாகப் பெற்றுக்கொண்ட வினைதான் அலண்டேயிற்கும் பினோஸேயிடமிருந்து கிடைத்தது. பினோஸே எப்போதுமே ஒரு விலாங்கு. அகப்படும் நேரமெல்லாம் நோயைக் காரணம் காட்டியோ, உலக அரசியலிலே பலம் பொருந்திய நண்பர்களின் தயவாலோ, தான் பதவி விலகும்போது பெற்றுக்கொண்ட சட்டத்தின் கைகளிலே விசாரிக்கப்படாதிருக்கப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொண்ட காப்பினாலோ தப்பிக்கொள்வார். இந்த செப். 11 இலே அமெரிக்காவின் உளவுநிறுவனத்தின் கை மிகவும் தெளிவு; அ.கூ.மாநிலங்களின் ஹென்றி கிசிஞ்ஸர் - நோபல் பரிசு பெற்றவராக இருந்தபோதுங்கூட- இந்த செப். 11 நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டி, உலக நீதி மன்றத்திலே விசாரிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை - ஈராக் போரினை இன்று ஆதரிக்கும் கிரிஸ்தோபர் ஹிகின்ஸ் ஊடான பலர் முன்வைக்கின்றனர். அரபாத்திற்கு நோபல் பரிசு கிடைத்ததை எப்போதும் சுட்டிக்காட்டி அலறும் அமெரிக்கப்பத்திரிகைகள் செய்தித்தாபனங்கள் கிசிஞ்ஸரின் செயற்பாடுகள் குறித்து மௌனம் சாதிக்கவே செய்கின்றன. இந்நிலையிலே பினோஸே இந்த முறையாவது சட்டத்தின் முன்னே சரியாக விசாரிக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதியாகச் சொல்லமுடியாத விடயமே. ஆனாலும், மந்தமும் மறதியும் வயதுகாரணமாக ஏற்பட்டிருக்கின்றது என்று வைத்தியரீதியாக வயோதிபத்தினை நோயாகக் காட்டியவர், அண்மையிலே புளோரிடாவிலே தன் முன்னைய செயற்பாடுகளை நியாயப்படுத்தி ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த செவ்வி அராஜகமானது.

அண்மைக்காலத்திலே உலகப்பிராந்தியங்களிலே எனக்கு நம்பிக்கை தருவதாக இருப்பது, இலத்தீன் அமெரிக்காதான். நெடுங்காலமான கைப்பொம்மைச்சர்வாதிகாரிகளுக்கெதிரான போராட்டங்களின் சோர்வுபட்ட நிலை, வலதுசாரி அரசுகளின் தீவிர வன்முறைகள் என்பன எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மொத்தமாகவே அவநம்பிக்கையை மட்டுமே இந்தப்பிராந்தியத்திலேயிருந்து காலிக்கொண்டிருந்தன. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, மெக்ஸிகோ முதல் ஆஜெர்ண்டீனிய-சிலி முனைவரை ஒரு நம்பிக்கை தெரிகின்றது. உலக வல்லரசினதும் அதன் கூட்டாளிகளினதும் பார்வை இஸ்லாமியத்தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ஈராக்கிலும் குவிக்கப்பட்டிருக்கின்றபோது, இலத்தீன அமெரிக்கா ஒரு புதியவீச்சைத் தருகின்றது. பிரேஸிலின் லோலா, வெனிசூலாவின் சாவாஸ், சிலியின் Lagos, ஆர்ஜெண்டீனாவின் Kirchner, உருகுவேயின் Vazquez ஆகியோர் நம்பிக்கையைத் தருகின்றனர். பழைய ஆட்சியாளர்களான பெருவின் பியூஜிமோரி, ஆர்ஜண்டீனாவின் கார்லோஸ் மெனம், கோஸ்ராரிக்காவின் Rodrங்guez ஆகியோர் ஏற்கனவே சட்டத்தின்பிடியிலே இழுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதேநேரத்திலே, இடதுசாரியினர் இப்புதியபோக்கினை இடதுசாரிகளுக்கான வெற்றி என்று கருதிக்கொள்ளமுடியாது. அரசியல்ரீதியிலே பெருமளவிலே இடதுசாரிகள் பதவிக்கு வந்தபோதுங்கூட - குறிப்பாக, தென் அமெரிக்காவிலே; மத்திய அமெரிக்காவிலே அவ்வாறு சொல்லமுடியாது- பொருளாதார அளவினானநிலையைப் பார்த்தால், திறந்தபொருளாதாரக்கொள்கைகள் இன்னும் திறக்கப்பட்டேயிருக்கின்றன; மற்றைய மூன்றாமுலக நாடுகளைப் போல, இப்பிரதேசத்திலும் தொழிலாளர்கள்மீதான பெருநிறுவனங்களின் சுரண்டல் தொடரவே செய்கின்றன. தத்தமது வாக்குவங்கிகளைக் காப்பாற்றிக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசியல்வாதிகள் அவ்வப்போது குரலெழுப்பினாலுங்கூட, தமதுநாடுகள் மீதான கடன்களை நீக்குவதிலும் குறைப்பதிலும் பெருநிறுவனங்களின் சுரண்டல்களைத் தவிர்ப்பதிலும் எந்தளவு வெற்றி பெறமுடியுமென்பது கேள்விக்குறியானதே. போதாக்குறைக்கு இடதுசாரி அரசாங்கத்துக்கு எதிராக (எரிபொருட்)பெருநிறுவனங்களின் தொழிலாளர் அமைப்புகள் நிற்கும் புதியநிலையை வெனிசூலாவிலே காணக்கூடியதாக இருக்கின்றது. எழுபது எண்பதுகளிலே ஆளுக்காள் எதிராக ஆயுதமேந்திப் போராடிய வலதுசாரி, இடதுசாரி போராளிகள் கூட்டாக வேலைகேட்டுப் ஆயுதமில்லாப்போராட்டம் நிகழ்த்தும் புதுநிலையும் மத்திய அமெரிக்காவிலே தெரிகின்றது. முன்னைப்போல, எதையும் வலது-இடது, முதலாளித்துவம்-பொதுவுடமைத்துவம் என்று இலகுவாக நடுவே ஆழிக்கோடுபோட்டுப் பிரித்துப் பேசும் எளியநிலையிலே இனிமேலும் உலகு இல்லை என்பது தெளிவாகின்றது. விரும்புகின்றோமோ இல்லையோ, இந்தக்கொள்கைகள் இன்றைய நிலையை முழுமையாக விளக்கப்போதா; முன்னெடுத்துச் செல்லவும் போதா. நடைமுறையை ஏற்றுக்கொள்கின்றபோது, நிகழ்வுகளைப் புரியவும் எதிர்வினைகளைப் புரியவும் இன்னொரு அல்லது பல மூன்றாம் (நான்காம், .... முடிவிலிப்) பாதை(கள்) தேவைக்கும் தேடலுக்குமுரியன. ஆனால், எந்த முழுமையான கொள்கை அகப்பட்டாலுங்கூட, அது பினோஸேயின் செயற்பாடுகளை நியாயப்படுத்தமுடியாதென்பது என் முழுமையான நம்பிக்கை.

Wednesday, December 08, 2004

Interesting

it is interesting to see that my post on pushparajah's book vanishes for the fifth time. It seems to be a known problem in blogspot. :-(

.

trying to capture the ever excaping (supposedly) previous post


 
Statcounter