அலைஞனின் அலைகள்: புலம்

Tuesday, February 15, 2005

எங்கெங்கு காணிலும் மன்மதராசாடா

நான் மன்மதராசா படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், வாசித்ததின்படி மன்மதராசா பிடிக்காத பெண்களைக் கொலை செய்கின்றான். (இங்கே பேசப்போகின்ற விடயத்துக்குச் சம்பந்தப்படாமல் நோக்கினால், இதிலே என்ன திரைப்படப்புதுமை இருக்கின்றதென்று தெரியவில்லை; Psycho வந்ததிலிருந்து, மூடுபனி, சிவப்புரோஜா, நூறாவது நாள் எல்லாவற்றிலும் இதேபாட்டை சினிவண்டியோட்டத்தைக் கண்டுவிட்டோம். இதிலே 'வில்லன்' அஜித் ( அல்லது 'ஜானி' ரஜனிகாந்த்) செய்கின்றதுபோல, தம்பி பெயரிலே சிம்பு கைங்கரியத்தைச் செய்கின்றார் என்று இணையத்திலே கண்ட விமர்சனங்களை வைத்து நான் புரிந்து கொள்கிறேன்).

இதன்மேலான நிரூபாவின் பதிவுக்கான கறுப்பியின் எதிர்வினையின் சாரமாக எனக்குப் படுவன கீழ்வருவன:

1. மன்மதராசாவிலே சிறுபிள்ளைகளை ஈர்க்கக்கூடியன நடனங்களும் பாடல்களுமே; படத்தின் கரு என்ன சொல்கின்றதென்பதல்ல (அல்வாசிட்டி விஜய் நியூ குறித்து எழுதிய உரையாடலின் நோக்கோடு இக்கருத்து இயைந்துபோகிறது)

2. தமிழ்ப்படங்களிலே பெண்களைப் பயன்படுத்துவதும் அவர்களுக்காகச் சொல்லப்படும் தீர்வுகளும் அந்தக்காலத்தைவிட இப்போது பரவாயில்லை; குறைந்தபட்சம், மாறவேயில்லை என்கிறபோது, மன்மதராசாவைமட்டும் கீழிழுத்துப் பேசுவது நியாயமற்றது

3. புலம்பெயர்சூழலிலே குழந்தைகளிலே இப்படியான திரைப்படம்சார் பெண்கள் சார் கருத்துருவாக்கத்திலும்விட தமிழர்நிகழ்வுகள்சார் ஆயுதவன்முறையினாலே வரும் கருத்துருவாக்கம் ஆழமானதும் கெடுதலானதுமாகும்.

குழந்தைகளின் பார்வையும் வளர்ந்தவர்களின் பார்வையும் எல்லாச்சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை என்பதை மறுக்கவில்லை. ஆனால், இந்நிலையிலே குழந்தைகள் என்று கறுப்பி யாரை வரையறுக்கின்றார் என்று எனக்குத் தெளிவில்லை. குழந்தை (child) என்பதும் முன்விடலை (adolesent) என்பதும் தம்மளவிலே வேறான கிரகிப்பு, கற்றுக்கொள்தன்மை, உளமுதிர்ச்சி கொண்ட பருவங்கள். ஐந்து ஆறு வயதுக்குழந்தைகள்வரை, கறுப்பி சொல்வதுபோல, நடனம், பாட்டினைமட்டுமே ஈர்த்துக் கொள்ளும். அதேபோலவே, "சிங்களவனைக்கொல்லடா; பகைவர்படையை முறியடா" என்ற -சொல்லிக்கொடுக்கும் பெரியவர்கள் வெட்கப்படவேண்டிய- பாட்டுக்கும் சொல்லிக்கொடுத்த காலடி, கைசையவு, கண்சிமிட்டு தவறாமல் செய்துவிட்டு மேடையை விட்டு இறங்கிப்போகும்; அதுக்குக் கொல்தல்/சாவு என்பதன் புரிதல் இருக்கப்போவதில்லை. என் நண்பன் ஒருவனின் ஆறு வயது மகனிடமும் இன்னொரு நண்பனது நான்கு வயது மகளிடமும் நான் கண்டது, இறப்பு என்பது நித்திரை கொள்வதுபோல என்பதாகவும் கொஞ்ச நேரத்திலே எழுந்து அடுத்த காரியத்தைச் செய்ய ஆள் போய்விடும் என்பதான உணர்தலே. குழந்தைக்குக் காணாத சிங்களவனைக் கொல்வதும் தெரியாது, மன்மதராசா பெண்களைக் கொல்வதற்கான காரணமும் தெரியாது. ஆனால், அதற்கு அப்படியான படத்திலே பார்த்த, நாடகத்திலே பழகிய செயற்பாடுகளைக் காரண-காரியம் புரியாமல் மீளச் செய்து பார்ப்பது மிக இலகு. அண்மையிலே புளோரிடாவிலே, WWF (Nature நிகழ்ச்சியிலே இல்லை, தொலைக்காட்சி மக்மோகனின் சண்டை மேடையில் :-)) பார்த்த ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை, பார்த்ததை நடித்துப்பார்க்கையிலே தன்னை அறியாமலே கொன்றிருக்கின்றது. ஆக, ஒரு பெண்ணை ஓர் ஆண் கத்தியாலே வெட்டி, துவக்காலே சுட்டுக் கொல்கிறான் என்பதை, மேடையிலே "சிங்களவனை வெட்டு" என்ற கேவலங்கெட்ட பாட்டுக்கு நாட்டியம் புரிகின்ற குழந்தையும் செய்யும்; மன்மதராசாவைப் பாட்டு, நடனத்துக்காகப் பார்க்கும் (ஆண்)குழந்தையும் புரியாமலே செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

ஆனால், புரிந்தும் புரியாமலும் உளமுதிர்வினைக் காண்பதையும் கேட்பதையும் கொண்டு பகுத்துத் தன் கருத்தாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் பருவம் இந்த முன்விடலைப்பருவம்; அதற்கு "சிங்களவனைக் கொல்" என்பதற்கும் பொருள் விளங்கும் (இல்லாமலா, சிறுவர்கள் இயக்கங்களிலே செயற்படுகின்றார்கள் :-(); மன்மதராசா பெண்ணை வெறுப்பதற்குப் பெண்கள் கெட்டவர்கள் என்ற அபிப்பிராயமும் புரியும்.. இவை புரியாமற் பாடலுக்காகப் படமும் பார்க்கின்றவையோ, அல்லது சிங்களவர்களை ஏன் வெட்டவேண்டும் என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பாமல் நடித்துக்காட்டலிலே இயங்குகின்றவையோ அல்ல, இவற்றிலே ஒன்றைவிட மற்றது கேடானதில்லை. ஆனால், எதிர்காலத்திலே ஆயுதவன்முறையிலே ஒரு சராசரி (புலம்பெயர்) ஆண் ஈடுபடுவதிலும்விட ஒரு பெண்ணை (கருத்துநிலைப்பாட்டிலோ அல்லது செய்ன்முறையிலோ) தாக்கவே அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. குற்றமும் தண்டனையும் என்கிறதிலே பெண்கள்மீதான் கருத்துவன்முறையிலே இலகுவாக எதுவிதமான தண்டனையும் இல்லாமலே ஓர் ஆண் ஈடுபட்டுவிட்டுப்போகலாம் ("ஆண் என்றாலே இவன்தான்/இவ்வளவுதான்" என்ற மனுஷி என்ற குறும்படத்தினை எடுத்த ஒருவருக்கு இது புரியாமலிருக்கமுடியாது என்று நான் நம்பவில்லை); ஆனால், அடுத்தவனுக்கு ஒரு குத்துவிட முன்னாற்கூட, தண்டனை பற்றி நிறைய யோசிப்பான். பெண்கள் மேலான வன்முறையை கருத்தளவிலே இலகுவாக, வீட்டுள்ளே, சமூகத்திலே, இணையத்திலே தொடர்ந்து நகைச்சுவை என்ற பெயரிலேகூட பலர் ஆரவாரிப்போடு நிகழ்த்த வாய்ப்பிருக்கின்றது. இதற்கு மன்மதராசா போன்றவையும் கறுப்பி சொல்கின்ற பழைய படங்களும் புராணங்களும் அமைத்ததும் தலைமுறையாகக் கடத்தப்படக்கூடியதுமான கருத்துகட்டமைப்பே பெரும்பங்கு வகுக்கின்றன. முன்விடலைகளே பெரு அவதானத்தோடு தமது முன்மாதிரிகளைத் திரைப்படங்களிலும் போர்க்களங்களிலும் தேடிக்கொள்கின்றனர். முழுக்க முழுக்கவே வல்லுறவைத் திணிக்காத பாலுறவுப்படங்களை (pornographic films) உணர்வளவிலே முதிர்வடைந்தவர்கள் பார்ப்பதை நான் எதிர்ப்பதில்லை (இவை ஆண்பார்வையாளர்களைக் கருத்திலே கொண்டு பெண்களை நுகர்தலுக்கான வர்த்தகப்பண்டங்களாக வைக்கின்றன என்ற குற்றச்சாட்டினை மேற்கிலே இன்றைய நிலையிலே எந்தளவு ஏற்கமுடியுமென்பது குறித்துத் தனியே வாதாடவேண்டும்); ஆனால், இதுதான் பண்பாடு என்ற விதத்திலே, பெற்றோரினாலே அங்கீகரிக்கப்பட்டு பிள்ளைகளுக்கு வரும் தமிழ்ப்படங்கள், வீரநாட்டியநிகழ்வுகள் தரும் கருத்துகளுக்குப் பெற்றோரின் அங்கீகாரம் இருக்கின்றதென்ற ஓர் உணர்வே பிள்ளைகள் மத்தியிலே தவறான கருத்தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அந்தளவிலேதான் அந்நியத்துவம் என்று புகட்டப்பட்டு எச்சரிக்கையோடு எட்டிநின்று உறவாட வேண்டிய நிலையிலிருக்கும் "This is my mom's boy friend" என்கிற நண்பர்களிலும்விட பிள்ளைகளுக்குத் தவறான கருத்தாக்கங்கள் தமிழர்கலைவெளிப்பாடுகள் என்பவற்றினூடாக நுழைகின்ற அபாயம் இருக்கின்றது.

Griffithஇன் The Birth of a Nation, திரைப்பட நுணுக்கங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும், அது விதைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. அது இங்கும் பொருந்தக்கூடும். வேண்டுமானால், பாய்ந்துவரும் புலியிலும்விட, அழகாக நெளியும் பாம்புக்குத்தான் குழந்தை அநாவசியமாகக் கையை நீட்டும் அபாயம் இருக்கின்றது.

முரண்நகை: இந்தக்கடைசி வசனத்தினை அடித்துக்கொண்டிருக்கும்போது, காதுகளிலே ஏ. ஈ. மனோகரனின் நேரடி நிகழ்ச்சியொன்றிலே பதிக்கப்பட்ட "சின்னமாமியே, உன் சின்னமகளெங்கே?" பாட்டுப் போய் முடிந்து, தமிழ்மக்கள் உணர்ச்சிபூர்வமாகக் கைதட்டுவது நிகழ்கின்றது :-) / :-(

Saturday, February 12, 2005

எண்ணங்களின் எதிர்வினையாக, பிரகாஷ¤க்குச் சுருங்க

நந்தா கந்தசாமியின் ஓவியம்மீதான மதியின் எண்ணங்கள் பதிவிலே பிரகாஷ் இட்ட உள்ளீட்டத்திலே பெயரிலியின் பெயர் ஓரிடத்திலே குறிப்பிடப்பட்டிருப்பதால், பதில் இங்கே.
==========

பிரகாஷ், இங்கே என் பெயர் வந்ததால் அந்த விடயத்தின்மீது இது;

மனுஷ்யபுத்திரன் மனசு நொந்துபோவதற்கு நான் காரணமா என்று முறைக்கப்போவதில்லை. சுந்தரராமசாமிக்கும் அவருக்கும் சேர்த்துக் கிண்டல் செய்த ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் எதிராகக் கையொப்பம் போடச் சொல்லிக்கேட்டபோது, காலச்சுவட்டிலே மனுஷ்யபுத்திரன் இருக்கவில்லையா? காலச்சுவட்டிலிருந்து கையொப்பம் இடச்சொல்லிக் கேட்டுவந்த எத்தனையோ பேர்களிலே என் பெயரும் இருந்தது (இல்லாவிட்டால், என் இணைய அஞ்சல்முகவரிக்கு வந்திருக்காதல்லவா?) அப்படியாக இருந்தபின்னால், இன்றைக்கு மனுஷ்யபுத்திரன் எழுத்தாளர் கையொப்பம் போடுவது பற்றிச் சுந்தரராமசாமிக்குக் கேள்வி கேட்டால், என்ன செய்வது? (வேண்டுமானால், ஜெயமோகனுக்கும் திண்ணை(த்)தூங்கிக்குமிடையிலே உயிர்மையிலே பதிவுகளில் யாரோ எழுதி வந்தததை ஜெயமோகன் என்ன விதத்திலே திரித்துப்போட்டார் என்பது குறித்து வந்த பழைய கோபத்தின் காரணமாக நான் எழுதிவிட்டேன் என்றாவது கொள்ளுங்கள். பரவாயில்லை :-)) பழையவற்றைப் புகைக்காகப் பற்ற வைத்துக்கொண்டு சூடாக நானுங்கூட இங்கே ஒரு காபிக்கும் காரத்துக்கும் ஆடர் கொடுக்கலாம். எதற்கு?

இனி மேலே குறித்த ஓவிய விடயம் குறித்து; பா. ராகவனுடன் நீங்கள் அறியவே பல முறை புத்தகப்புழுக்காலத்திலிருந்து சொருகுப்பட்டிருக்கின்றேன். அதற்காக நீங்கள் அவர் உங்கள் நண்பர் என்ற முறையிலே என்னோடு 'பேசி'யிருக்கின்றீர்கள். அவர் குறித்த அவ்வப்போது சொல்லப்பட்ட அபிப்பிராயங்கள் அந்தந்த விடயங்கள் தொடர்பானவை. இங்கோ வெங்கடேஷின் புத்தகம் குறித்த பதிவிலே நந்தா கந்தசாமியின் ஓவியம் குறித்து அது முறையல்ல என்றது தவிர நான் ஒரு வரி ஏதும் பேசவில்லை. காரணம், இந்த 'என்னுடைய படம்' (அது சரி, பெரீய்ய்ய பப்படம்!). ஆனால், நீங்கள் என் பெயரையும் மதியின் எண்ணங்கள் பதிவிலே இழுத்துவிட்டிருப்பதாலே, (இந்தப்பதிவிலும்) விளக்கம் தரவேண்டிய நிலை. அந்தப்படம் குறித்த என் பதிலை மற்றைய பதிவிலே கண்டிருப்பீர்கள். [என் அணுகுமுறை இணையத்தூடாகத் தெரிந்த நட்பு, எடுக்கப்பட்ட என் படத்திலே என்ன கிடக்கின்றதென்ற வியப்பு, கூடவே, நானும் எனது வலைப்பதிவுகளுக்குப் படங்களை இணைப்பதுண்டு (fair use என்ற அளவிலே இப்போது Google image தேடலில் வரும் thumbnail அளவுக்கே நானும் இணைக்கிறேன் என்றபோதும்; இன்னமும் ஈழத்துப்படைப்பாளிகளின் படங்கள் விகடன், குமுதம் போன்ற இடங்களிலே வந்தால், நான் அவற்றினைச் சேகரிப்புக்காகச் சேர்த்து வைப்பதும் உண்டு) என்ற அளவிலே என்றதிலே இதெல்லாம் ஒரு பெரியவிடயமாக்காமல், மனைவி தவிர எவர்க்கும் இது நடந்ததே என்னாலே தெரியாமல் நகர்ந்திருக்கின்றேன். (காசி போன்றவர் அசுரன் அவரது எழுத்தினை அள்ளிப்போட்டது குறித்துச் செய்ததினை அணுகிய விதத்தோடு பார்க்கும்போது, நான் கையாண்ட விதங்கூட ஓரளவு அலட்டலாகத் தெரியலாம் :-))

ஆனால், நந்தா கந்தசாமி என்பவர் ஓவியத்தை மிகவும் ஆழமாகவே எடுத்துக்கொண்டவர். இணையத்திலே இல்லாதவர், சம்பந்தப்பட்டவர்களைத் தெரியாதவர் என்றளவிலே அதை இணையத்திலே தோழியர் பதிவிலே எடுத்திட்ட மதியின் பதிவு அவரை ஓவியருக்கு நியாயப்படுத்தவும் மற்றவர்களுக்கு அறியப்படுத்துவதும் அவசியம். என்னைப் பொறுத்தமட்டிலே, தோழியர் பதிவிலேயிருந்து அ·து எடுக்கப்பட்டதென்றால், மதி ஓர் எதிர்காலப்பதிவுக்காகவாவது பேசுவது நியாயமே. இல்லாவிட்டால், ஜெயமோகன் போல நாளைக்கு இணையத்தினரைக் கிண்டல் செய்துகொண்டே அதையும் விற்பனைப்படுத்தும் எழுத்துப்போக்கிரிகளுக்கு இணையத்தின் விரிவினைச் சுட்ட ஏதுமில்லை. [ஜெயமோகன் அருள்மொழிநங்கை பெயரிலே தஞ்சாவூர் பல்கலைக்கழகத்து ஆளொருவரினது இசைபற்றிய கட்டுரையை அள்ளிப்போட்டுப் பின்னாலே மன்னிப்புக் கேட்டதெல்லாம் சிலவேளை பதிப்புலக இலக்கியத்திறமைகளிலே ஒன்றாகப் பேசப்படக்கூடும்].

நிச்சயமாக, எனக்கும் "திருடன் பா.ராகவன்" போன்ற அநாவசியத்துக்கு அதீதப்படுத்தப்பட்ட பதங்கள் வெறுப்பையும் அருவருப்பையுமே ஏற்படுத்துகின்றன. பா. ராகவனின் கட்டளைகள் இழுத்துவந்த தெறிவினைகளோ தெரியாது; ஆனால், நிச்சயமாக திருடன் என்ற பதம் அதீதம். ஆனால், அப்படியான பதில்களுக்கு மதி என்ன செய்யமுடியுமென்பது எனக்குத் தெரியவில்லை. டிஜே குறிப்பிட்ட புதுமைப்பித்தன் விவகாரமும் மெய்யென்று அறிவீர்கள். காலச்சுவட்டிலே சிவக்குமார் இப்படியாக அள்ளிப்போடுவது குறித்து தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளையும் கண்டிருப்பீர்கள். தமிழக வர்த்தகப்பத்திரிகைகளின் இந்த அள்ளிப்போடும் விடயம் விடயம் குறித்து உங்களோடு ஒப்புக்கொள்கிறேன். (யாழ்மணம் என்ற பத்திரிகை தொடங்கிய ஆண்டிலே இப்படித்தான் எக்ஸிலிலே வந்த என்னுடைய கடிவகையை அள்ளிப்போட்டிருந்தார்கள்). படங்கள் மிகத்தாராளமாக சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடக்கம் பல இடங்களிலே அள்ளிப்போடப்பட்டிருக்கின்றன (இதிலே வாசகர்கள் தேடி அள்ளி அனுப்பி வைக்கின்றது வேறு). ஆனால், எல்லோரும் நடத்துகின்றார்களே என்பதற்காக அது சரியாகாது.

சம்பந்தப்படாமல், ஒரு கேள்வி; அசோகமித்திரனுக்குக் கிழக்குப்பதிப்பகம் நடத்தும் விழா மன்றிலே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட அசோகமித்திரனது அத்தொகுப்புகளையும் வாங்க வசதி உண்டா? இங்கிருந்து என்னுடைய நண்பர் ஒருவர் சென்னை வருகின்றார். அவரூடாக இயலுமானால், அதை அங்கே வாங்கி எடுக்க விழைவு.

கடைசியாக, வலைக்கு வந்து மனுஷ்யபுத்திரன் குறித்து வருந்தும் உங்களுக்கு நிச்சயமாக, பசுவோடு சேர்ந்து பிரபல கன்றாகத் துடிக்கும் பன்றியாக இருப்பதிலும்விட, தன்னிச்சையாகவே திரிய விழையும் சுயாதீன மூர்க்கப்பன்றிகளும் உண்டு என்பது தெரியுமென்பது என் நம்பிக்கை; 1998 இலே அருந்ததி ராய் குறித்து நா. கண்ணனாலும் 2004 இலே பிரமிள் குறித்து குப்புசாமி சிவகுமாரினாலும் 2005 இலே மனுஷ்யபுத்திரன் குறித்து பிரகாஷாலும் ஒரு வராகம் மூசிக்கொண்டே நிலம் தோண்டி நெடுநாளல்ல, இலக்கு அடைநாள் வரை அலையும். ;-)

அப்பாடா! அலையாமல், பெயரிலி சம்பந்தப்பட்டதற்குமட்டுமே பெயரிலி பதிலளித்திருப்பது அதுவும் பேயிலியாகப் பதிலளித்திருப்பது குறித்து பெயரிலிக்குப் பெரிய மகிழ்ச்சி. :-)