அலைஞனின் அலைகள்: புலம்

Wednesday, August 08, 2007

வலைநெறி வளைநெரி

வலைநெறி வளைநெரி
படம் நன்றி: The Hunger Project

"தமிழ் தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களை விடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல. ஈழத்தமிழன் என்ற சுய அடையாளத்தை நான் மறுக்கமுயல்வது அபத்தம். ஆயினும், அந்தச் சுய அடையாளத்தைப் பேண எனக்குள்ள உரிமை, தனது சுய அடையாளத்தைப் பேண, வேறு எவருக்கும் இருக்கவேண்டாமா? இங்கேதான் 'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை ஒரு மார்க்ஸியவாதியின் மொழிப்பற்றின் முன்னும் இனப்பற்றின் முன்னும் தெளிவாகிறது. தமிழர் ஒடுக்கப்பட்டால் அதற்கெதிராகக் குரல் கொடுப்பதோ போராடுவதோ, தமிழர் மேம்பட்டோர் என்பதனாலே அல்ல, எல்லோரும் சமமென்பதாலேதான். வியற்னாம் விடுதலைப்போரின் தேசியத்தன்மைகூடச் சமத்துவ அடிப்படையிலானதே ஒழிய, இன மேம்பாடு கோரும் முறையிலானதல்ல" - சி. சிவசேகரம் நேர்காணல், காலச்சுவடு இதழ் 15 (1996)

மேலேயும் வாசிக்க எண்ணமும் பொறுமையும் கொண்டவர்கள் வாசித்துக்கொள்ளவேண்டிய எனது மறுதலிப்புக்கூற்றுகள்

1. இவ்விடுகை தனி(ப்)பட்ட -/பெயரிலி. என்ற எனது கருத்துகளின் தொகுப்பு மட்டுமே; என் மொழி, நாடு, அமைப்பு, கதிரைக்கால், குதிரைவண்டி சார்ந்த வேறெவருக்காகவும் பிரதிநிதியாகச் சொல்லப்படுவதல்ல; அதனால், ஈழம்.எதிர்.இந்தியா, ஈழத்தமிழர்.எதிர்.தமிழகத்தமிழர்.எதிர்.புலம்பெயர்தமிழர், பார்ப்பான்.எதிர்.திராவிடன் புரிதல்களெல்லாம் அநாவசியமாக நான் சொல்வதைத் திசைதிருப்புவதாக அமையுமென்று நம்புகிறேன். அவ்வழி புக்கி, முக்கி வரும் 'அகதி, 'பார்ப்பான்' வகைப்பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டா

2. அண்மையிலே நடந்த சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே மாலன் பேசிய வலைநெறி, அதனுடன் சம்பந்தப்பட்டு வலைப்பட்டறை நெறிப்படுத்துனர் மா. சிவக்குமார் (மற்றும் வலைப்பட்டறை அமைப்பாளர்கள்) நடத்துமுறை, வெளியிட்ட கருத்து ஆகியற்றினை மட்டுமே மையப்படுத்தி வரும் இடுகை இது. ஆனால், இஃது எவ்விதத்திலும் வலைப்பதிவர்பட்டறையினைக் குறித்த விமர்சனமாகக் கருதப்படக்கூடாது; அவ்வாறு விவாததைத் திசை திருப்பும் வகையிலே திரிக்கப்படவும் கூடாது. வலைப்பதிவர் பட்டறை குறித்த மிகுதி செயற்பாடுகளிலே எனக்குக் கருத்தினைத் தெரிவிக்க எதுவிதமான விழைவோ தேவையோ அறிதலோ, அதைக் கேட்க மற்றவர்களுக்கும் எதுவிதமான விழைவோ தேவையோ இல்லை. [அதனால், இங்கே பேசுவதற்குச் சம்பந்தமில்லாத வலைப்பதிவர் பட்டறை தொடர்பான அநாமதேய, அன்னியோன்யநேய(ர்)ப் பின்னூட்டங்களும் என் இவ்விடுகையின் தேவைக்கும் என் சொந்தத்தேவைக்கும் அநாவசியமானவையென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா]

3. இங்கே இவ்விடுகைக்குப் பயன்படுத்தியிருக்கும் தரவுகளைத் தந்த நண்பர் தன் பெயரை வெளியிடலாமென அனுமதி தந்திருந்தாலுங்கூட, அநாவசியமாக நான் வெளியிடவிரும்பவில்லை. என் தரவுகளிலே தவறென எதுவிருந்தாலுங்கூட, ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்படும்போது, வழக்கம்போல திருத்திக்கொள்வேன்.

4. என் தொடரான "அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு" உடன் தொடர்புள்ளதென்றாலுன்கூட, அதன் பகுதியாக இவ்விடுகை எழுதப்படவில்லை



பின்புலம்


கோ. சுகுமாரனின் ஆனந்தவிகடன் செவ்வியொன்றினை மேற்கோளிட்டு, "மக்கள் பங்கு பெறாத புரட்சியினால் பயனில்லை" எனச் செல்வநாயகி இட்ட இடுகையின் பின்னூட்டத்திலே, பதிவர் சந்திப்புக்குப் பதிலளிக்கும் வகையிலே, இந்தியா/தமிழ்நாட்டின் மரபுசார் மார்க்ஸியக்கட்சியின் தலைமைப்பீடங்கள்-தொண்டுத்தோழர்கள் இடையேயான வித்தியாசத்தினைச் சுட்டிக்காட்டும்போது, இந்து இராம் அவர்களின் சீனச்சார்பு மார்க்ஸியம்.எதிர்.அமெரிக்காவினைப் பயன்படுத்துதல் என்ற இரட்டைத்தன்மையைச் சுட்ட "......இப்போதுதான், செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே? இது காலகாலமாகத் தவங்கிடந்து பெற்ற புரட்சியில்லையா? இத்தகைய தலைவர்களின் காத்திருந்த புரட்சியின் பின் வாலைப் பார்த்திருந்த பஞ்சாலைத்தொழிலாளர்களோ தெலுங்கானா விவசாயிகளோ கடைசியாகத் தங்கள் நிலையை உலகுக்குச் சுட்டுவதற்காகத் தற்கொலை செய்து போராடுவதுதான் புரட்சி முழுமையடைந்தது என்பதா? அல்லது..... சேவையின் விருதாக அந்நிய நாடொன்றின் லங்கா ரத்னா விருதைப் பெறுவதும் சிறை மீண்ட இருள்நீக்கி சுப்பிரமணியத்தைக் காத்திருந்து காரிலே ஏற்றிப்போவதுமேதான் காத்திருந்த புரட்சியி(டி)ன் ஈடேற்றமா? என்னத்தைக் கிழித்தீர்கள்? நீங்கள் ஐம்பதாண்டுகள் பண்ணிக் கிழிக்காததைத்தான் நக்ஸலைட்டுகள் கடந்த பத்தாண்டுகளேனும்..." என்று எழுதியிருந்தேன்.
இதற்கு, மாலன் வலைநெறிவசப்பட்டு, "அந்த சூழ்நிலைகளில் அவனது கருத்தை தங்களது மாற்றுக் கருத்துக்கருத்துக்களை வைத்து ஆராய்வது, விமர்சிப்பதுதான் முறையானது. ஆனால் பொதுவாகத் தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில், தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது என்றால், அந்த அறிவுஜீவியை அவனது சொந்த வாழ்க்கை, குடும்பம், ஜாதி இவற்றின் அடிப்படையில் தனிமனிதத் தாக்குதல்களைத் (இந்த்த் தாக்குதல் வசையாகத்தான் இருக்க வேண்டியதில்லை, எள்ளலாகக் கூட இருக்கலாம்) தொடுத்து அவர்களை devalue செய்கிற முயற்சி நடக்கிறது. அப்படி devalue செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை மதிப்பிழக்கச் செய்யலாம் எனவும் சிலர் கருதிக் கொள்கிறார்கள். அதை உங்களைப் போன்றவர் அனுமதிப்பதும் வியப்பளிக்கிறது. உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? ராமிற்கே கூட என்ன சம்பந்தம்? அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கைத் தீர்மானிக்கிற பொலிட்பீரோ உறுப்பினரா? மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய விவாதத்தில் அவரை அவ்ர் மகளை, அவர் தாத்தா வரை இழுத்து ஏகடியும் பேசுவது முறைதானா? அது இந்த விவாதத்திற்கு எந்த விதத்தில் பயனளிக்கும்?" என்று செல்வநாயகியிடம் கேட்டு எழுதியிருந்தார்.

செல்வநாயகி அவ்விடுகை திசைதிரும்புவதாகக் கருதியதாகத் தெரிவதால், மேற்கொண்டு பின்னூட்டங்களை நிறுத்திவைப்பதாகக் கூறினார். அதன் பின்னால், என் உதாரணத்துக்கான காரணத்தை, செல்வநாயகியின் "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் இடுகையின் பின்னால், "மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்." என்று விரிவாகத் தந்து, என் இடுகை கரைவு -9 இன் பின்னூட்டத்திலும் தந்திருந்தேன். மீண்டும், என் கரைவு - 10 இடுகையிலே கூற்று 4 ஆக, "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி" வரும் இடுகையிலே இன்னும் விளக்கிச் சொல்வேன் என்றும் எழுதியிருந்தேன். இத்தனைக்குப் பிறகும், மாலன் என் இடுகைகளை வாசிக்கின்றார் என்றே கருதியிருந்தேன்.

ஆனால், சென்னைப்பல்கலைக்கழகத்திலே களமிட்டு நடந்த ஒருநாள் வலைப்பதிவர் பட்டறையிலே, வலைநெறி (வலைநன்னடத்தை என்றும் சில பதிவுகளிலே குறிப்பிடப்பட்டிருந்தது) பற்றி மாலன் பேசியிருக்கின்றார்; வலைப்பதிவுகளிலே இணையப்போகின்றவர்களுக்கு நல்லதும் அவசியமானதுமான தலைப்பு - இணையத்துக்கு அப்பாலான பெருமளவிலே ஒற்றைவழி தகவற்செலுத்துகை ஊடகங்களிலேயே பட்டறிவுமிக்க மாலன் நிகழ்த்தியிருந்தாலுங்கூட. அப்பேச்சின்போது, "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்" என்று சுட்டி, மேற்கொண்டு அது தொடர்பாகவும் அதற்கப்பால், ஈழத்தமிழர்கள் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு வைத்திருப்பது பற்றியும் பேசியிருக்கின்றார். இஃது அவருக்கான எனது பதில்களையெல்லாம் குமுதம், இந்தியா ருடே ஆசிரியர்களுக்கான கடிதங்களாகக் கருதிக்கொண்டிருக்கின்றாரோ என்று எண்ணவைக்கின்றது. "நான் பேசுவதை மாற்றாமலே பேசிக்கொண்டிருப்பேன்; நீ வாசித்து வை; நீ என்ன சொல்கின்றாயென்று நான் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; நீ என்ன நினைக்கின்றாய் என்று நான் நினைக்கின்றேனோ, அதையே நீ நினைப்பதாக அகப்படும் என்னை நம்பக்கூடியவர்களுக்கு என் பெயரையும் விலாசத்தையும் வைத்துச் சொல்லிக்கொண்டிருப்பேன்" என்பதாகத்தான் அவரின் செயற்பாடுகள் செய்யவைக்கின்றன.

இவை குறித்து 'ஓசை' செல்லா அவரது இடுகையொன்றிலே, மாலனின் உரையினையும் ஒலிப்பதிவாகப் பிறகு இடுவேன் எனக் குறிப்பிட்டிருந்ததாலே, பயன்படுத்தப்பட்ட சரியான வரிகள் கிடைக்குமென்று அவர் இடும் வரைக்கும் ஒன்றரை நாள் பார்த்திருந்தேன். ஆனால், இதுவரை செல்லா இட்டதாகத் தெரியவில்லை. ஏற்கனவே மோகன்தாஸும் மா. சிவக்குமாரும் இது குறித்து சிவக்குமாரின் இடுகையொன்றின் பின்னான பின்னூட்டங்களிலும் லக்கி லுக், பதிப்பெழுத்தாளர்கள், இணையத்திலில்லாதிருத்தல் பற்றி மாலனிடம் அவரின் பதிவுப்பின்னூட்டத்திலும் பேசிய பின்னால், மாலன் பேசியவை, ஒலிப்பதிவாகவோ, முழுமையாகவோ இணையத்திலே எல்லோரும் கேட்கவென வருமென்ற நம்பிக்கை குறைந்திருக்கின்றது. மேலும், மா. சிவக்குமாரின் "எவரைப் பற்றி இவர் இப்பட்டறையிலே வலைநெறி உரையிலேகூடச் சொன்னால் எனக்கென்ன?" என்பதுபோலவே அர்த்தம் தரும் ""கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்ற அலட்சியத்தன்மையுடனான வரிகள் உள்ளெழுப்பிய ஆத்திரமும் உடன் எழுதத்தூண்டுகின்றது. ஆனாலும், இனியுங்கூட, செல்லாவோ பட்டறைக்குச் சென்று மாலனின் வலைநெறி உபன்நியாசத்தினைக் கேட்ட எவராவது அவரின் உரை, தொடர்ந்த கேள்விமறுப்பு என்பன உட்பட்ட ஒலிப்பதிவினைத் தர முடியுமானால், நன்றி.

இங்கே இரண்டு விடயங்கள் பற்றி எழுத விரும்புகிறேன்.

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு;
2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு:

மேலே நான் ஏன் இந்து ராமின் மகளினைக் குறிப்பிட்டேன் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கின்றேன். அது புரியாவிடின், மாலனின் வாதத்தினைச் சரியென ஒரு பேச்சுக்குக் கொள்வோம். அந்நிலையிலுங்கூட, இவ்விடுகையின் எல்லையயும் நோக்கையும் கருத்திலே கொண்டு, மாலனுக்கு மிகவும் எளிமையான கேள்வி; "வலைநெறி என்று பேசுகின்றவர், வலையிலே உங்களுடன் முரண்பட்ட நான் இல்லாதவிடத்து எதற்காக என் பெயரை வலைக்கு புதியவர்களிடம் உதாரணத்துக்கு எடுக்கவேண்டும்?"

மாலனின் எட்டு இடுகையிலே கோவிந்தசாமி பற்றிக் குறித்திருந்தை நான் செல்வநாயகியின் இடுகையின் பின்னூட்டத்திலேயும் என் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலேயும் சொல்லியிருந்ததற்கு மாலன் தன் "அன்புள்ள பெயரிலி" இடுகையிலே, எள்ளலாக, "என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப் பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்ததற்கு, நான் ஏன் பின்னூட்டங்கள் சிலரின் பதிவுகளிலே இடுவதில்லையென்பதையும் சொல்லியிருந்தேன் (1. பதிலுக்கு, "பின்னூட்டங்களுக்குப் பயந்ந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கத் தயங்குவது என்பதற்கும், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் புத்திசாலித்தனத்திர்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரு வேளை என் பதிவில் பின்னூட்டம் பிரசுரமாவதில் சங்கடங்கள் இருக்குமானால், அவற்றை பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு அனுப்புங்கள். இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுவதால் அவை மற்றவர் பார்வைக்குப் போகாது. அல்லது நீங்கள் எனக்கு மின்னஞல் அனுப்பலாம். நீங்களே சொல்வது போல அடுத்தவரின் அந்தரங்கம் கூட அறிந்து வைத்திருக்கும் பதிவுலகில் என் மின்னஞச்ல் முகவரி கிடைப்பது அவ்வளவு சிரமமாக இராது. உங்கள் பதிவிலேயே அதை நீங்கள் வெளியிட்டுக் கொள்வதும் கூட முறையானதுதான். ஆனால் அப்படிச் செய்யும் பட்சத்தில், அதனைக் குறித்த தகவலைப் பின்னூட்டப் பெட்டியிலோ, மின்னஞ்சலிலோ தெரிவித்துவிட்டால் நலமாக இருக்கும்" என்று அவர் எழுத அதற்கு, "நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ என அஞ்சுகிறேன். நான் பின்னூட்டமிடப் பயப்படவில்லை. ஆனால், ஒருவர் ஒரு பின்னூட்டம் இடுகை இட்டவருக்கு மாற்றாக இட்டபின்னால் அப்பதிவிலே அதைத் தொடர்ந்து பலர் ஏன் எமக்கு வம்பு என்று தம் சொந்தக்கருத்துகளையும் தெரிவிக்க அஞ்சுவதைத்தான் சொல்கிறேன் :-) ஓர் உதாரணத்துக்கு, உங்கள் முன்னைய பதிவுகளிலே பின்னூட்டம் இட்டவர்களிலே எத்தனை பேர் இங்கே பின்னூட்டியிருக்கின்றார்களெனப் பாருங்கள். இந்த இடுகை கொஞ்சம் விவகாரமான இடுகை என்று எண்ணிக்கொண்டு தள்ளி நிற்பார்கள். அதன் காரணமாகவே பல பதிவுகளின் "சமநிலை"யைக் குழப்பவேண்டாம் என சொந்தப்பெயரிலோ பெயரில்லாமலோகூடப் பின்னூட்டுவதில்லை. அதைத்தான் சொன்னேன்." என்று நான் எழுதியிருந்தேன். இப்படியாக, இருவரும் உலாவும் வலையிலேயே தன் பதிவிலே சொல்லப்பட்டதற்குப் பதில் தனக்கும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற வலைநெறியை முன்வைத்தவர், நான் இல்லாத சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே போய் என் பெயரைக் குறிப்பாகச் சொல்லி, நான் பதில் அளிக்கமுடியாதவகையிலே நான் விளக்கங்களையோ சொல்லப்பட்ட பின்புலத்தினையோ சொல்லாமல், தன் கருத்தைச் சொல்வது - அதுவும் வலைநெறியைப் பற்றிச் சுட்டுவதற்குச் சொல்வது எவ்வகை நெறி?

சரி; இனி நான் இந்து இராமின் மகளைச் வலைச்சந்திக்கிழுத்து ஏளன சுய மந்தஹாஸம் உதிர்த்ததாகவே மாலன் வைக்கும் குழந்தைப்பிள்ளை வாதத்தைச் சரியென்றே வைத்துக்கொண்டு, அந்தக்கோட்டிலேயே பார்ப்போமே? "125 ஆண்டுப்பழமை இந்துவையா அல்லது விடுதலைப்புலிகளையா உலகம் நம்பும்?", "ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் கொடுத்தனுப்பினோம்" இவற்றிலே இல்லாத ஏகடிய ஹாஸ்யமா, அல்லது அதற்கும்மேலாக, அதே வலைநெறியிலே அவர் தொடர்ந்து சொன்ன "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள்" என்பதிலேயில்லாத குரூரம் ஊடோடும் எள்ளற்பரிஹாஸமா நான் சொன்னதிலேயிருக்கின்றது? அதைக்கூட விடுவோம்; செய்தியாக வந்த இராமின் மகளின் கதையை நான் பேசியிருக்கக்கூடாதென்றால், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் எடுக்க முயற்சிப்பதாக, இந்து மட்டும் செய்தி வெளியிடலாமா? இங்கே அப்பனுடனான தகராறுக்கு மகனை ஏன் இழுக்கின்றீர்கள் என்று மாலன், நரசிம்மன் ராமிடம் கேட்டுச் சொல்வாரா? நியாயப்படுத்தத்தான் செய்வாரா?
இதைக்கூட விட்டுவிடுவோம். வலைநெறி விரிவுரையிலே இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்துவதற்கும் அதற்குச் சம்மந்தமில்லாமல், ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா கடவுட்சீட்டுடன் அலைவதைப் பற்றியிழுப்பதற்கும் எந்த நெறியேனும் இடம் கொடுக்குமா? மாலன் ஆசிரியராகவிருந்தபோது குமுதத்திலே நடிகைகள் பற்றியும் பெண்கள் பற்றியும் வந்த தரத்துக்கான சஞ்சிகைநெறியினையும் (சிம்ரனுக்கு நெருக்கமானது உள்ளாடை: லைட்ஸ் ஆன் ரங்கராஜன்) சன் தொலைக்காட்சியிலே திமுக சார் செய்திகளைமட்டுமே புகைபோக்கிபோல ஆற்றுப்படுத்தித் தந்துகொண்டிருந்த தார்மீகநடுநிலைநெறியினையும் விடவா இராமின் மகள் கொலம்பியா பல்கலைகழகத்திலே படிப்பதைச் சுட்டிய தீநெறி தேய்ந்துபோயிருக்கின்றது?

-/பெயரிலி.யை வலைநெறி வழுவியவன் என்று காட்ட எத்தனையோ கட்டற்ற உதாரணங்கள் இருக்க, உப்புச்சப்பற்ற இந்து ராம் மகளினைக் கோடி காட்டிவிட்டான் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப எடுப்பதிலேதும் உள்நோக்கிருக்கின்றதா, மாலன்? நான் போகாத சென்னையிலே என் "கல்யாண குணாம்சங்களை" ஏற்கனவே தெரிந்த நாற்பதுபேருக்கும் யாரோ ஒரு மூஞ்சி தெரியாத வாலும் வரியும் நிறைந்த காட்டுவிலங்கென்றுமட்டும் உங்களின் விபரிப்பினை வைத்துப் புரிந்துகொள்ளக்கூடிய புதுப்பதிவர்கள் நாற்பதுபேருக்கும் வலைத்தர்மோபதேசம் செய்வதனாலே எனக்கேதும் பாதிப்பில்லை; தெரிந்தவர்களின் என் மீதான கருத்திலே உங்களின் பாதிப்பில்லை; தெரியாதவர்களின் என் மீதான கருத்திலே எனக்கு - அவர்கள் இணையத்திலே சேர்ந்து அறியாதவரைக்கும் - பாதிப்பில்லை. இஃது உங்களுக்கும் தெரியும். ஆனாலும், நீங்கள் அங்கே இந்து ராம் மகள், ஈழத்தமிழர், ஸ்ரீலங்கா விசா என்று பூதத்தைக் கிண்ட முயன்றது, தனியே என்மீதான உங்கள் காழ்ப்புணர்விலேயில்லை என்றே நினைக்கிறேன். வந்திருப்பவர்களிலே இணையத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றிய தவறான கருத்தினைப் பதிய வைக்க விரும்பியிருக்கலாம். இல்லாவிட்டால், மிகச் சிறந்த பொருத்தமான, வலைப்பதிவர் பட்டறைக்கு வந்திருந்த, முன் நின்று நடத்திய பலருமே தெளிவாகச் சாட்சியம் கூறியிருக்கக்கூடிய சல்மா அயூப் விவகாரம் எப்படியான வலைநெறி பிறழ்வென்று உங்களாலே காட்டியிருக்கமுடியாதா, என்ன? சல்மா அயூப் என்பவர் வலைப்பட்டறை நிகழ்வினை முன்நின்று நடத்திய ஒருவரைப் பாதித்ததைவிடவுமா, சந்திப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்திலே ராமின் மகள் படிக்கின்றார் என்று நான் சொன்னது உங்களுக்கு மிகவும் நெறிபிறழ்வாகப் போய்விட்டது? நிச்சயமாக, இத்துணை பத்திரிகைப்பட்டறிவுள்ள உங்களுக்கு அது தெரிந்திருக்கும். அதன் பிறகும் நீங்கள் இந்து_இராம்_அவரின் மகள்_ஈழத்தமிழர்_இணையம்_ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் என்ற சொற்களினாலே மத்தியதட்டுப்புதுப்பதிவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் தமிழகத்திலே உருவாக்க முயன்றீர்களென்றால், அது நிச்சயமாக எதேச்சையானதல்ல; இந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசுக்காக, ஈழத்தமிழரைப் பற்றித் தமிழக மத்தியதட்டின் மூளைக்குள்ளே நுழைத்துச் செய்து வரும் அதே தந்திரப்பூச்சாண்டியைத்தான் நீங்களும் உங்களுக்கு வாய்ப்பான இடங்களிலெல்லாம் எப்படிச் செய்கின்றீர்கள் என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றீர்கள். எதற்கு உங்களுக்கு ஈழத்தமிழர்கள்மீது இத்துணை காழ்ப்புணர்வு?

2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

தமிழ்நாட்டிலேயிருக்கும் பெரும்பான்மையான தமிழ்ப்பதிவர்களுக்கு என்னைப் பற்றி (ஏற்படுத்தப்பட்டு) இருக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்கிறேன். அதனால், பட்டறையிலே மாலன் பேசியபோது, அதனைத் தட்டிக்கேட்கவேண்டிய அவசியமின்றி, "நமக்கேன் வம்பு?" என்றோ "நன்றாகச் சொல்லட்டும்" என்றோ இருந்துவிட்டுப் போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. அதையும் புரிந்துகொள்கிறேன். இது கூடல் (conference) அல்ல, குலை(த்)தல் அல்லது கூடாமை (unconfernce) என்பதாலே, அமைப்பாளர்களுக்குப் பேசப்போகின்றவர்கள் இதைத்தான் பேசப்போகின்றோமென ஆரம்பத்திலேயே சுருக்கம் கொடுத்திருக்கவேண்டிய நிலைமையுமில்லை என்பதையும் புரிந்துகொள்கிறேன். மாலன் பேசியபின்னால், அது பதிவாகி வராதுபோனால், அதைப் பற்றி மாலன் கூறிய தனியாளோ, குழுவினரோ அறிந்துகொள்ளவேண்டிய அவசியமோ சிக்கலோ எவருக்குமில்லையென்றே மட்டுறுத்துனரும் அங்கே கூ(ட்)டத்திலே இல்லாத, பின்னாலே அறிந்திருக்கக்கூடிய மற்றைய அமைப்பாளர்களும் பட்டறையின் நல்ல விளைவுகளிலேயே கருத்தினைச் செலுத்தி, நம்பிக்கையைப் பரப்பும் தேவையிருப்பதையும் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், மாலனைத் தொடர்ந்து பேசவிட்டுவிட்டு, அவரிடம் கேள்வி கேட்க முயன்றவரை மட்டும் மட்டுறுத்துனர் தடுப்பது எவ்வகை வலை(ப்பதிவர் பட்டறை)நெறி? குறைந்தபட்சம், அது தவறென்றாவது எழுதியோ அல்லது மாலனிடம் சுட்டிக்காட்டியோ இருந்திருந்தால், வலை(ப்பதிவர் பட்டறை) நெறி பற்றி புதுப்பதிவர்களுக்கில்லாவிடினும், அமைப்பாளர்களின் சக பழைய பதிவர்களுக்கேனும் ஏற்பட்டிருக்குமல்லவா? திட்டமிட்டே இதையெழுதக்கூடாததுபோல, எந்த அமைப்பாளரும் சுட்டவில்லை. சரி, சுட்டி ஒருவர் வலையிலே காட்டியபின்னுங்கூட, "கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்பது கொஞ்சம் நிர்த்தாட்சணியமற்ற அராஜகவலைநெறிக்கூற்றாகப்படவில்லையா? இதற்கெல்லாம் மேலாக, வலைப்பதிவுகளிலே சக ஈழத்துப்பதிவர்களின் நாளாந்த (எனக்கே புளித்தோ விறைத்தோ போன) சாதாரண சா ஓலத்துக்கும் கூடவிருந்து ஒப்பாரி வைத்தோ ஆறுதல் சொல்லியோ பின்னூட்டம், முன்னூட்டம் தரும் தமிழகவலைப்பதிவர்களிலே மோகன்தாஸ், செல்லா, இராம.கி போன்ற ஓரிருவர் தவிர மீதி எவருமேகூட, மாலன் கூறுவதை அவ்விடத்திலே நிறுத்தியோ அல்லது அதன்பின்னாலே சுட்டியோ அவரின் வலைநெறிமீறலையும் சொந்த அரசியல் ஊசிகுத்தல்களையும் வந்திருக்கும் புதுப்பதிவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கமுடியாமற்போய்விட்டது? இப்படியான சூழல்களிலே தமிழகத்தின் சக மக்களிடம் ஈழத்தமிழர்களின் நியாயமான பக்கத்தினை மாலன், இராம் போன்றவர்களின் ஊடகவலிமையையும் மீறிச் சொல்லமுடியாதிருக்கும் நண்பர்கள், வலைப்பதிவிலே மட்டும் ஆறுதல் சொல்வதாலே நடைமுறையிலே என்ன பலன் கிட்டுமென்று நினைக்கின்றீர்கள்? எல்லாவற்றுக்கும்மேலாக, வலைப்பதிவர் பட்டறைகள் இப்படியான செயற்பாடுகளினால் புதிதாக வரக்கூடிய பதிவர்களின் மூளைப்பதிவுகளிலே வலைப்பதிவுகள் பற்றித் தவறான கருத்துகளை ஏற்படுத்தி,, தம் கால்களிலே தாமே சுட்டுக்கொள்ளும் விளைவினையே ஆகின்றன என்று தோன்றவில்லையா ? இவை பற்றி எனக்குக் கவலையில்லை. அது பட்டறை அமைப்பாளர்களின் கவலை; நாளைக்கு இன்னோர் இடத்திலே பட்டறை வைப்பவர்கள், இதே மாதிரியாக வலைநெறியைப் பேசக் கேட்க, சென்னையிலே மீறப்பட்ட வலை(ப்பதிவர் பட்டறை)நெறியையே உதாரணம் எடுத்து யாராவது புதுப்பதிவர்களுக்கு வலைநெறிமீறலைச் சொல்கின்றபோதுதான் பட்டறை அமைப்பாளர்களாலே புரிந்துகொள்ளப்படுமெனத் தோன்றுகின்றது.

வலைப்பதிவர் பட்டறையைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பதென்பது மிகவும் சிக்கலான, பொறுப்புமிகுந்த, பன்நோக்குடனான காரியமேதான்; அதிலே இப்படியான ஒரு வலைநெறிமீறல் ஒரு பெரிதான அலட்டிக்கொள்ளும் விடயமேயல்ல; அதனால், இதனைப் பெரிதுபடுத்தி, இவ்விடுகையை இட்டதாக எண்ணக்கூடாது. தவிர, தனிப்பட மாலன் என்னை நான் இல்லாத இடத்திலே இழுத்துப்பேசியது குறித்தும் எனக்கு வருத்தமில்லை; தினசரி சட்னிவடை உறவினர்கள், நண்பர்களின் நலன் கேட்டு அனுப்பும் பின்னூட்டங்களைவிடவா மாலன் பெரிதாகத் தொந்தரவு கொடுக்கின்றார்? :-) சொல்லப்போனால், அவரின் பொய்யான முகத்தோலை மேலும் உரித்துக்காட்ட வாய்ப்பென்று மகிழ்ச்சியே. ஆனால், இனியேனும், வலைப்பதிவர் பட்டறை அமைப்பாளர்கள் இப்படியான ஈழத்தமிழர்களை ஏகடியம் செய்யும் மாலனின் உரை போன்ற நெறி போதிக்கும் போர்வையுரைகளைத் தவிர்க்கும்முகமாகப் பேசப்போகின்ற உள்ளடக்கங்களைக் கேட்டுக்கொள்வது பயனானதும் நியாயமானதுமாகும். ஏற்கனவே தமிழகத்தமிழர்கள் மத்தியிலே இந்தியா ருடே, சன் டீவி, தி இந்து போன்றவை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஈழத்தமிழருக்கு வாலும் வரியுமிட்ட விலங்குவடித்தினை இன்னமும் பயமுறுத்தும்வகையிலே மாலன் போன்றவர்கள் செய்ய அனுமதிப்பது எவ்வகைப்பட்டறை நடத்தும் தர்மத்தின் அடிப்படையிலுங்கூட நியாயமாகாது.

0 Comments:

Post a Comment

<< Home