அலைஞனின் அலைகள்: புலம்

Thursday, November 17, 2005

கூவம் நதிக்கரையிருந்து பேர ஏரித்துறைவரை...

"We do support the principles of democracy and support efforts to bridge the differences among Iraqis." - Secretary of State (USA) Condoleezza Rice, in her visit to Iraq, appeals to sunni arabs to participate in new national elections in december; 2005 Nov., 11

1942 இன் பின்னரை; வட ஆபிரிக்காவின் போர்முனை; பாலைவனத்துநரி என்று எதிரிகளாலும் விதந்தோதப்பட்ட ஜெர்மனியின் தளபதி எட்வின் உரொமல் (Edwin Rommel) பிரித்தானியத்தளபதி பேர்னார்ட் மொண்ட்கோமரியினால் (Bernard Montgomery) பின்வாங்குநிலைக்கு உள்ளாக்கப்படுகின்றார். இதற்கு உரோமலின் குள்ளநரித்தனம் தோற்றுவிட்டதுதான் முழுக்காரணமென்று சொல்லமுடியாது; முன்னர் வட ஆபிரிக்காவிலே உரொமலின் வெற்றிக்குக் காரணமாகவிருந்தது, கூட்டுநாடுகளின் சங்கேதச்செய்திப்பரிமாற்றத்தை இத்தாலியப்புலனாய்வாளர்களின் உதவியோடு உரொமல் உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதென்றால், பின்னர் அல்ட்ரா (ULTRA) என்ற தமது சங்கேத உடைப்பின்வழியிலே பிரித்தானியப்படையினர் உரோமலின் படைப்பிரிவின் சங்கேதசெய்திப்பரிமாற்றத்தினை உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதும் முக்கியமாகிறது. தோற்றுப்போகும் உரொமலை ஹிட்லர் ஜெர்மனிக்கு வரவழைத்து த்ரமுயர்த்தி, ஆனால், கட்டாய ஓய்விலே சில மாதங்கள் வைத்திருக்கின்றார். பின்னர், பிரான்ஸுக்கு ஜெர்மனிசார்பிலே உரொமல் போர்த்தளபதியாகச் செல்கிறார்.நோர்மண்டியிலும் மூக்குடைவு. இறுதியாக, ஹிட்லருக்கெதிராகச் சதி செய்திருக்கலாமென்ற கருத்திலே, கட்டாயப்படுத்தப்பட்டு நஞ்சருந்தி இறக்கின்றார். வாகன விபத்தின் விளைவான மரணமென்ற செய்தியோடு, தேசப்பற்றாளராக வெளியுலகுக்குச் சொல்லப்பட்டு, முழு இராணுவமரியாதையுடன் மரணநிகழ்ச்சி அரங்கேறுகின்றது. அதன் பின், அரையாண்டுக்குள்ளே ஹிட்லரின் ஆட்டம் முடிவுக்கு வருகின்றது.

தான் விரும்பியபடி பிரதமர் பதவியை அதிகாரமுள்ள பதவியாக்கி அதிலே தான் உட்கார வழிசெய்யும்வரைக்கும் பதவியில் நீடிக்க முடியாமல் அரசியற்றுறவறம் போக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இலங்கையின் (முன்னாள்) அதிபர் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா, காம்ரேட் நரசிம்மன் ராம் இற்கு ஸ்ரீலங்காவின் இரத்தினம் வழங்கிய செய்தியை வாசித்தபோது, ஜெர்மனிக்கு வரவழைக்கப்பட்டு உரோமல் கொடுக்கப்பட்ட பதவியுயர்வும் நஞ்சுமே ஞாபகத்துக்கு வந்தன.

தொடர்ந்து அவதானித்தவரையிலே இலங்கையின் அரசியல் குறித்து தோழர் இராம் மூன்று வகையான குறிக்கோள்களுடன் செயலாற்றுகின்றார்.
1. இந்தியாவின் (மேலாதிக்க)நலன்
2. இந்தியப்பத்திரிகைத்துறையிலே தன்னையொத்த இலங்கையின் அரசியலிலே பாரம்பரிய மேட்டுக்குடி ஆட்சியாளர்கள்/வாரிசுகளின் நலனைப் பேணுதல்
3. விடுதலைப்புலிகள் மீதான, அவரது பதிப்பூடகங்கள் இன்னும் விடாது வலியுறுத்தும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் தோல்வியின் விளைவாக அடிபட்டுப்போன அவரின் 'நான்' இற்கு ஒத்தடம் கொடுத்துவிடக்கூடிய காழ்ப்புணர்வும் பழிவாங்குணர்வும்
இந்தியாவின் மேலாதிக்கநலனை வலியுறுத்துவதிலேதான் அவரின் பத்திரிகையும் சஞ்சிகைகளும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக, இந்திய அரசின் நலனை மிக வெளிப்படையாக முன்வைக்கும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி 'கருணா' முரளிதரன் ஆகியோரினை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்துவதைக் கண்டுகொள்ளவேண்டும். இங்கே ஈழமக்களிடையே இவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் எந்நிலையிலிருக்கின்றனவென இவருடைய ஊடகங்கள் எதுவிதமான செய்திகளையும் அவரது விசு-வாசகர்களை அவர்கள் எத்தேர்தலிலும் பெற்ற வாக்குகள் மூலமோ கருத்துக்கணிப்புகள்மூலமோ அறியத்தருவதில்லை. பத்திரிகையின் கருத்துப்பத்திகளுக்கும் செய்திப்பதிவுகளுக்கும் வித்தியாசமேயில்லாத விதமாகத் தருவதுதான் அவரது த இந்து பத்திரிகையும் ப்ரொண்ட் லைன் சஞ்சிகையும் நிகழ்த்தும் பொம்மலாட்டம்.

தன்னையொத்த மேட்டுக்குடித்தன்மை பொருந்திய பரம்பரைகளின் தொடர்ச்சியாக வரும் இடதுசாரிமுகங்களை முன்னெடுப்பதிலே அவர் தொடர்ந்து செயலாற்றி வருகின்றாரென்பதை மிகவும் சுலபமாகக் கண்டுகொள்ளலாம். சந்திரிகா குமாரணதுங்கா, அவரது சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா, நீலன் திருச்செல்வம், இலஷ்மண் கதிர்காமர் போன்றோரை இவர் முன்னிலைப்படுத்துவதற்கு இந்த இந்து பாரம்பரியம்-ரத்வத்தை பாரம்பரியம்-திருச்செல்வம் பாரம்பரியம்-கதிர்காமர் பாரம்பரியம் என்ற ஒரு மேட்டுக்குடிநேசக்கூட்டு, அரசியலினைத் தாண்டி, நாட்டைத் தாண்டியும் நிலவுகின்றது. ஒரு புறம் இவர் சார்ந்திருக்கும் மார்க்ஸியவாதிகள், பகிரங்கமாகவே ஸ்ரீலங்காவின் அதிவலதுசாரிநிலைப்பாடுள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) இனை மார்க்ஸிய நேசசக்தியென தமது இந்திய தேசப்பொதுவுடமைவாதிகளின் மகாநாட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்துகின்றனர். இது, ஏறக்குறைய ஹிட்லரின் தேசியப்பொதுவுடமை ஜேர்மன் தொழிலாளர் கட்சியினை (National Socialist German Workers Party), சோஷலிஸ்டுகளின் மூன்றாம் அகிலம், நான்காம் அகிலம் மகாநாடுகளுக்கு அழைத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியான கூத்துத்தான். ஆனால், அது குறித்து காம்ரேட் இராமின் ஊடகங்கள் எந்த எதிர்ப்புக்குரலையேனும் எழுப்பவில்லை; த இந்துவின் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் பாரம்பரியத்தினைப் போற்றும் அறிவுசீவிகளும் அது குறித்தேதும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், இதே பத்திரிகையிலே அண்மையிலே சந்திரிகா அம்மையாரினை எப்படியாக தொடர்ந்து அவரின் குடும்பத்துக்கு விசுவாசிகளாக மட்டுமேயிருந்து வந்த இராஜபக்ஸ குடும்பத்தினைச் சேர்ந்த மஹிந்த இராஜபக்ஸ ஜேவிபியின் ஆதரவோடு ஓரங்கட்டி, வனவாசம் முடிந்து வரும்வரையிலே பாதுகையை வைத்தாள்பவராக இராமல் அல்லது முறைக்குரிய அரசவம்சத்தின் அடுத்த வாரிசு பட்டஞ்சூடும் வயதினை அடையும் வரையிலே காப்பாளாராக இராமல் தானே முடியைச் சூட்டிக்கொள்ள முயல்வதைச் சுட்டிக் காட்டி ஒரு கருத்துப்பத்தி வந்திருக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட பத்தி, இராம் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா இரத்தினத்தினைப் போல முக்கியமான ஒன்று. அதைப் பற்றி இக்குறிப்பிலே பின்னாலே சொல்கிறேன்.

மூன்றாவது நோக்கு, மிகவும் தனிப்பட்ட உணர்வோடு சம்பந்தப்பட்டது; இலங்கை இயக்கங்களுக்கு ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகப் போராடும்வண்ணம் உயிர்கொல்லும் பயங்கரவாதிகளுக்கான ஆயுத உதவியினை இந்தியா வழங்கிக்கொண்டிருந்த 1985 இலே (30.12.85) புரொண்ட் லைனுக்காக செவ்வியிலே விடுதலைப்புலிகளின் தலைமையிடம் கேள்விகள் இப்படியான கருத்துகளோடு வந்து விழுகின்றன: "விடுதலைப்புலிகள், இராணுவ இயக்கமாகத் தொடங்கி, மார்க்ஸிய-லெனினிய இயக்கமாக மலர்ந்திருக்கின்றது; மக்களிடம் சென்றடைய உங்களிடம் தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவா?" இதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் சொல்கிறார்: "நாங்கள் சோஷலிஸநாட்டினையே ஆக்கவிரும்புகின்றோம்; எங்களிடம் தொழிற்சங்கங்களில்லை; நேரடியாகவே மக்களிடம் சென்றடைகின்றோம்." விடுதலைப்புலிகள் என்றைக்கு மார்க்ஸிய-லெனிய இயக்கமாக இருந்ததென்று தெரியவில்லை; தமிழீழவிடுதலை இயக்கமும் (டெலோ) விடுதலைப்புலிகளும் அடிப்படையிலே வலதுசாரி இயக்கங்களாகத்தான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவரின் பதிலும் மெய்யிற்கு மாறான சுவையானதுதான்.. ஆனால், இப்படியாக, விடுதலைப்புலிகளிலே மார்க்ஸிய-லெனினிய நிலைப்பாட்டினைக் கண்ட புரொண்ட்லைன் ஆசிரியர், அவர் பத்திரிகையிலே இன்றும் ஈழத்தமிழருக்கான சிறப்பான ஒப்பந்தமென முன் வைக்கும் இலங்கை அரசு - இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தினை விடுதலைப்புலிகள் நிராகரித்த பின்னால், பொல்பொட் வகை இயக்கமென எதிர்க்கின்றார். இத்தனைக்கும் பொல் பொட்டின் ஆதரவாகத் திகழ்ந்த சீன அரசின் விருந்தினராகச் சென்று வந்து சீனாவினையும் சீனாவின் திபெத்து மீதான ஆக்கிரமிப்பினை விதந்தேத்தவுமோ அவர் தவறுவதில்லை. எல்லாவற்றினையும் விட நகைச்சுவையான அவரின் கருத்து, தம் பாரம்பரியப்பிரதேசத்திலே வந்தேறுகுடிகளான இஸ்ரேலியர்களை எதிர்க்க பாலஸ்தீனியர்களுக்கு இருக்கும் அவசியமும் நோக்கும் ஈழத்திலே இல்லை என்று அவர் சுபமங்களாவிலே கோமல் சுவாமிநாதனுக்குக் கொடுத்திருக்கும் செவ்வி. ஒரு குடியின் பாரம்பரியப்பிரதேசங்களெவை என்றோ அப்பிரதேசங்களின் மீதான அரசியற்சூழலை முற்றாகவே மாற்றும்வகையிலே திட்டமிட்டுச் செயற்பட்டு, மாற்றுக்குடிகளை ஏற்றுவது முறையல்ல என்பதையோ நெடுங்காலமாக இலங்கைக்காகச் சேவையாற்றியதற்கு இலங்கை இரத்தினத்தைப் பெற்ற இராம் தெரிந்து கொள்ளாமலிருந்திருக்கமுடியாது; அப்படியான குடியேற்றங்களும் ஈழக்குரலினை முடுக்கக்காரணமானதென்பதையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முன்வைக்கும் அவர் அறியாமலிருந்திருக்கமுடியாது. ஆக, அவரது ஈழத்தேவையின்மை போன்ற கருத்தெல்லாம் விடுதலைப்புலிகளின் இந்தியநிலைப்பாடு மீதான முரண்பாட்டின்பின்னாலும் இந்தியாவிலே தங்கியிராமற் செயற்படத்தொடங்கிய பின்னருமே உருப்பெற்றிருக்கின்றதெனலாம்.இவ்வகையிலேயும் அவர் ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு ஜனநாயக இயக்கமுகமூடிகளை அணிந்து காட்ட முயற்சிக்கின்றனவாகத் தெரிகின்றன.

இத்தனை நாட்களும் அவரது மூன்று குறிக்கோள்களும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால், மஹிந்த ராஜபக்ஸவின் தேர்வோடு இராமின் இரண்டாவது குறிக்கோளினால் மீதியிரண்டு குறிக்கோள்களும் முரண்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றதென்றே தோன்றுகின்றது. சந்திரிகாவின் குடும்பநலனை முன்னிட்டு (பண்டாரநாயக்கா குடும்பத்தின் அடுத்த வாரிசான அனுரா அண்மையிலே இந்தியா வந்தபோது சந்தித்துச் செவ்வி கண்டவர், சந்திரிகா வந்தபோது, ஜெயலலிதாவினை அறிமுகம் அந்தக்காலம் செய்துவைத்தவர், மஹிந்த இராஜபக்ஸ வந்தபோதெல்லாம் கண்டு கொண்டதாக நானறியத் தெரியவில்லை), மஹிந்த இராஜபக்ஸவின் பெயரை அடக்கி வாசிப்பாரா அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிராக இயங்குவதற்காகவும் இந்தியாவின் நலனைப் பிரதிபலிப்பேனென தேர்தற்காலத்திலே மிகவும் வெளிப்படையாகச் சொன்னதற்காவும் இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதுவாரா என்று அவதானிக்கவேண்டும். இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதும்பட்சத்திலே, தேர்தலின்போது, இராஜபக்ஸவின் ஜேவிபிகூட்டு, கருத்துவெளிப்பாடு குறித்து அவரின் பத்திரிகைப்பத்தியிலே வந்த கருத்து மீள அவதானிக்கப்பட்டு, முரண் சுட்டப்படும்.

எதுவோ, இராமுக்குக் கிடைத்த இந்த விருது, குறித்து ஈழத்தமிழர்களும் அவர்களின் நலனிலே அக்கறையுடையவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், அடையவேண்டுமென்பது என் கருத்து; மிகவும் வெளிப்படையாக, நடுநிலைப்பத்திரிகையாளராகச் சேவைசெய்ததற்கும் ஸ்ரீலங்காவிற்கான சேவைக்காக அவர் உழைத்தாரென்பதற்காவும் கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விருது அவ்வகையிலேதான் உரோமலுக்குக் கொடுக்கப்பட்ட நஞ்சினை ஒத்திருக்கின்றது. இந்தவிருது, அவரின் பத்திரிகைகளிலெ இத்தனை நாள், வெளிவந்த கருத்துப்பத்திகளின், செய்திகளின் நடுநிலையையும் இனி வரப்போகும் கருத்துப்பத்திகளின், செய்திகளின் நடுநிலைகளையும் ஸ்ரீலங்கா-இந்திய-ஈழ அரசியலை வெளியிலேயிருந்து பார்க்கும் இராமின் ஊடகங்களை இவை குறித்த செய்திகளுக்காக நம்பிய வாசகர்களின் நம்பிக்கைகளிலே பொத்தல் விழச்செய்திருக்குமென நினைக்கிறேன்; இராம்மீது அவர்சார்ந்த ஊடகங்களின்மீதும் அவற்றின் ஈழ-ஸ்ரீலங்கா அரசியற்செய்திகள் குறித்த உள்நோக்குகளிலே சார்புத்தன்மையும் பொய்மையும் திரிபுமுமிருக்கின்றனவெனக் குற்றம் சாட்டுகின்றவர்களின் கருத்துகள் கவனிக்கப்படச்செய்யும். ஆகவே, ஈழத்தமிழர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விருது குறித்து மகிழ்ச்சியடையவேண்டும்.

இதே காரணத்தினாலேயே, ஈழத்தமிழர்களின் தாய்நாட்டுக்கான தேவை குறித்து எப்போதும் மறுப்புத் தெரிவிக்கும், அதன் காரணமாக இலங்கை அரசியல் குறித்து இராமின் கண்ணோட்டத்தினையும் நிலைப்பாட்டினையும் ஆதரிக்கும் அரசியலறிந்த ஒரு சாரார் இராமுக்கு விருது கிடைத்ததும் அவர் அதை ஏற்றுக்கொண்டது குறித்தும் வருத்தமடைந்திருக்கின்றார்கள். (மறுதலையாக, விருது கிடைத்தால் அஃது ஓர் அங்கீகாரமென்ற வகையிலே எண்ணி அவரைப் பாராட்டும் இன்னொரு சாரார், இலங்கை அரசியலலிலே இராம் கொள்ளூம் நிலைப்பாட்டினை இராமே சொல்கிறாரேயென பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்கின்றவர்கள்; இவர்களும் முதற்சாராராரும் ஈழம் குறித்து ஒரே நிலைப்பாட்டினையெடுத்தாலுங்கூட, காரணகாரியங்கள் தலைகீழாகக் கொண்டவர்கள். முதற்சாரார் குறித்து எப்போதுமே எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியமுண்டு).

அதனால், என்னளவிலே, இப்போதைக்கு, இராமுக்கான இரத்தினத்தினை ஒரு வரப்பிரசாதமெனக் கொண்டு, அதன்பின்னான நகைச்சுவைத்துணுக்குகளென அச்செய்தி குறித்த வாழ்த்துகளைக் கொள்ளவேண்டுமென நினைக்கிறேன்.

'05 நவம்பர், 19 சனி 04:07 கிநிநே.

1 Comments:

Post a Comment

<< Home